பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 141 எல்லோருக்கும் நடு நாயகமாக, அலங்காரம் செய்யப்பட்ட காரில் அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை. குழந்தைகள் கூட்டம் மாப்பிள்ளையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது. வெங்கிட்டு தன் நண்பனிடம், “அதோ கார் பக்கத்திலே நிற்கிறாரே, அவர் தாண்டா ராக்ஃபெல்லர் மாமா! போட்டோ எடுக்கிறாரே, அவர் தான் மாப்பிள்ளைத் தோழன்' என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். நாதஸ்வரக்காரர்கள் நாட்டையில் ஆலாபனை செய்ய, கூட்டத்தினர் ஆங்காங்கே நின்று நின்று நகர்ந்து கொண்டிருந்தார்கள். பாண்டு வாத்தியக் கோஷ்டியினர் ஷண்முகப் பிரியாவில் இழைத்தபடியே அவர்களை முந்திச் சென்று கொண்டிருந்தனர். பஞ்சு அவ்வப்போது முன்னால் சென்று, வாத்தியக்காரர்களை நகர்த்திக் கொண்டிருந்தான். அழகும், ஆடம்பரமும் மிக்க கான்ஸ்டிட்யூஷன் அவென்யூவிலும், பென்சில்வேனியா அவென்யூவிலும் கூடியிருந்த கூட்டத்தைச் சொல்லி முடியாது. - நாரிக்ரூவாலைக் கண்டதும் நாய்கள் பிரமாதமாகக் குரைக்கத் தொடங்கின. அதைக் கண்டபோது அமெரிக்க மக்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஊர்வலக் காட்சிகளையும், நாய்கள் குரைப்பதையும் டெலிவிஷனில் எடுத்துக் கொண்டார்கள். வாண வேடிக்கை அமர்க்களங்களுடன் ஜாம் ஜாம் என்று புறப்பட்ட ஜானவாச ஊர்வலம், ஜார்ஜ் டவுனில் போய் முடிவதற்கு மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. கடைசியில் லவர்ஸ்லேன் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, தேங்காய் உடைத்து, தரிசனம் செய்துகொண்டு சம்மர் ஹவுஸை அடைந்தனர். பொழுது விடிந்தால் முகூர்த்தம்!