விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
31
முடிசூட்டு விழா முடிந்து, அரசுப் பணிகளை முடித்து இராமலிங்க விலாசத்தின் மச்சு வீட்டில் அமர்ந்திருந்தார் மன்னர். குழப்பமான சிந்தனைச் சூழலில், சேதுபதியின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாண்டி மண்டலத்தின் பெரு மன்னராக விளங்கிய திருமலை மன்னரது தலையீட்டை எதிர்த்து இராமேஸ்வரம் களத்தில் வீரப் போரிட்டு மடிந்த மாப்பிள்ளை வன்னியத் தேவன்[1] ஆணவம்மிகுந்த இராணி மங்கம்மாளது அக்குரோணிச் சேனைகளை முறியடித்த மன்னர் மன்னன் கிழவன் சேதுபதி,[2] அண்டை நாடாக இருந்துகொண்டு அடிக்கடி தொல்லை தந்த தஞ்சை மராட்டியரை நிர்மூலம் செய்த விஜய ரகுநாத சேதுபதி,[3] தூத்துக்குடிக் கடற்படையை கீழக்கரைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, மிரட்டிய, டச்சுப் பரங்கிகளை துணிச்சலாக சிறையில் அடைத்த செல்லமுத்து சேதுபதி[4] ஆகியவர்களின் ஒவியங்களைக் கொண்ட அந்த மண்டபத்தில், அவர்கள் அனைவரும் நேரில்வந்து அஞ்ச வேண்டாம் என ஆறுதல் சொல்லுவது போன்ற பிரமையை மன்னருக்கு அப்பொழுது ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.