அழைப்பு
தாய்நாட்டின் விடுதலையைக் குறிக்கோளாகக்கொண்டு, பணிபுரிபவனே, வீரன்——விவேகி. அவனுடைய அறிவும் ஆற்றலும் அந்த அரும்பணிக்கே, அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
உலக வரலாற்றுச் சுவடியிலேயே,தாய் நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட மாவீரர்களைப் பற்றிய செய்தியே, உன்னதமான பகுதி.
மணிமுடிதரித்து மன்னன் தங்கச்சிங்காதனத்தின் மீது வீற்றிருக்க, நடனமாதர் கடை காட்டி இடை அசைத்து, அவனுக்கும் அவனை அண்டிப்பிழைக்கும் அலங்காரப் பொம்மைகட்கும் களிப்பூட்ட, அக்காட்சியினை அகவலாகவோ, சிந்து ஆகவோ ஆக்கிடும் புலவனின் கவிதைகளைவிட, தாய்நாட்டின் விடுதலைப் போருக்காகக் களம்புகுந்தகாளை, தன்உடலிலே எதிரியின் வாள் பட்டதால் வழிந்தோடும் இரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி, வீரப் போர்புரிந்து கீழே விழும் போதும், "என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம் !" என்று வீர முழக்-