8
விடுதலைப் போர்
கமிடும் ஒலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல, மன எழுச்சி தரக்கூடியது.
விடுதலைப் போர், முடிவுற்று, அன்னை பாரத தேவி அரியாசனம் ஏறும் இந்நாள், முன்னாள் நடை பெற்ற காதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.
இது முன்னாள் காதையுமல்ல - இந்நாள் நடைபெறும் முடிசூட்டுவிழாவினை ஒட்டிய விஷயமுமல்ல. இது, இந்நாள் ஏக்கம் —— நாளையதினம் நடத்தப்பட வேண்டிய பணிக்கான துவக்கம்.
விடுதலைப்போர் திராவிடத்தின் விடுதலைப்போர்——இந்திய துணைக் கண்டத்து விடுதலைப்போர் எனும் பழங்கதை அல்ல.
பரங்கிக்கும் - பனியாவுக்கும் இடையே நடைபெற்ற போர், ஒருவாறு முடிவுபெற்றது - பனியாவுக்குப் பீடம் கிடைத்து விட்டது. பீடம் ஏறும் பனியாவின் பிடியிலே சிக்கியுள்ள திராவிடம் இனித் தன் விடுதலைக்காகப் போரிட்டாக வேண்டும்.
திராவிடம், வெளிநாட்டானின் பிடியில் மட்டுமல்ல, அறியாமையின் பிடியில், சிக்கிச் சிதைகிறது. இயற்கைச் செல்வத்தை எத்தர்கள் சுறண்டிச் செல்கின்றனர். சிந்தனையையோ, அறியாமையையோ கலை உருவிலே புகுத்திய கயவர் வழி வழிவந்தவர்கள், செல்லென அரித்து வருகின்றனர்.