வ. வே. சு. ஐயர்
39
கடல்கடந்தார் வழக்குரைக்கும் கலைகடந்தார்
கவிக் கம்பன் காவி யத்துக்
கடல்கடைந்தார் அமுதெடுத்தார் ஆங்கிலராம்
அரக்கர்க்கும் கையில் தந்தார்
கடல்கடந்து வந்திங்கே கடை விரித்தோர்
கலைச்சரக்கில் கருத்தைத் தந்தார்
உடல்கடந்தார் எனினும் நம் உள்ளத்தைக்
கடக்கவில்லை உறைய லுற்றார்!
அக்கரையில் இருந்தாலும் அயல்நாட்டில்
வாழ்ந்தாலும் அன்னை மீதில்
அக்கறையாய் இருந்து வந்த ‘இந்தியா
விடுதி’யிலே அங்க மானார்
சர்க்கரையா உயிரெமக்கு ; சமர்க்களமா
புதிதெமக்கென் றாங்கி லேய
சர்க்காரை எதிர்த்து வந்த சாவர்க்கார்
பாசறைக்கோர் தலைவர் ஆனார்
***
பட்டம் பதவிக்கும் கிட்டும் உதவிக்கும்
பண்பை மறந்தவரை - நாட்டின்
அன்பைத் துறந்தவரைப் - பெரும்
பட்டியல் போட்டுப் பதைத்திடும் காலத்தில்
பட்டம் பெற மறுத்தார் - அந்தக்
கட்டத்தில் ஒன்றுரைத்தார்
ஆட்டுக்குப் புல்லைப்போல் பட்டம் எனும் பேரில்
அடிமைச் சாசனமா? - நாட்டில்
அந்நியர்க் காசனமா? - தாய்
நாட்டுக்கு வாதாட நாடி நின்றேன் பிறர்
கேட்டுக்கு வாதாடவோ - வயிற்றுப்
பாட்டுக்கு வாதாடவோ?