அவள் என்னவானாள்?
127
அவ்வளவுதான்; என் தலை சுழல்கிறது; ‘கலகல’ வென்ற சிரிப்பொலி காற்றில் மிதந்து வந்து என் காதில் விழுகிறது; நான் வெறித்துப் பார்க்கிறேன்-அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் செல்கிறார்கள்!
“சரி, இனி நம்மைப் பொறுத்தவரையில் அவள் செத்தவளாகத்தான் ஆகிவிட்டாள்” என்று ஏங்குகிறது என் அப்பாவி மனம்.
மீண்டும் அதே குரல்; “இல்லை; அவள் சாகவேயில்லை!” என்று சாதிக்கிறது.
எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது. “பின் யார் செத்தது? நானா செத்துவிட்டேன்?” என்று கத்துகிறேன்.
“நீயும் சாகவில்லை” என்று அந்தக் குரல் முன்னைவிட உரத்த குரலில் கத்துகிறது.
நான் மிரண்டு போய், “பின் யார்தான் செத்தது?” என்று கேட்கிறேன்.
“காதல் செத்தது”
“அதற்குச் சாவே யில்லை என்கிறார்களே!”
“உண்மை; கவிதையிலே, காவியத்திலே, கதையிலே அதற்குச் சாவே யில்லைதான்! ஆனால், வாழ்க்கையில் எதற்கும் பிறப்பும் இறப்பும் உள்ளதுபோல அதற்கும் உண்டு” என்கிறது அந்தக் குரல்!
நீங்கள் அதை மறுக்கிறீர்களா?