மாட்டுத் தொழுவம்
135
என்னுடைய பேதை உள்ளம் அவருடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று துடியாய்த் துடிக்கும். என்னாலானவரை அந்த ஆசையை அடக்கிக்கொள்ள முயல்வேன். ஆனாலும் இரண்டு துளிக் கண்ணிராவது சிந்தாமற் போனால் அந்தப் பாழும் ஆசை அடங்குவதேயில்லை.
நினைத்த போதெல்லாம் அவர் வெளியே போவதற்குக் கிளம்புவார். அப்பொழுது எனக்கும் ஏனோ அவருடன் போக வேண்டுமென்ற ஆசை தோன்றும். அத்துடன் அவர் ‘எங்கே போகிறார்?’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் என் உள்ளத்தை அரிக்கும். என்னையும் அறியாமல் பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், "வெகு தூரமோ?" என்று கேட்டுவிடுவேன்.
அவ்வளவுதான்; அவர் முகம் அனலைக் கக்கும். ‘உன்னிடம் சொல்லிக் கொண்டுதான் போக வேண்டுமோ என்று சீறி விழுவார். அப்பொழுது என் முகம் எப்படி இருந்திருக்குமென்று இப்பொழுது உங்கள் கற்பனையில் தோன்றுகிறதல்லவா? பார்த்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுதாவது ஒரு சமயம் அவர் நேரம் போவதே தெரியாமல் காப்பி கேட்காமலே இருந்துவிடுவார். நானே எடுத்துக்கொண்டு போவேன். அப்பொழுது அவர் என்ன சொல்வார் தெரியுமா? "ஏன், மாலினி இல்லையா? எதற்காக நீ எடுத்துக் கொண்டு வந்தாய்? இப்பொழுது நான் உன்னுடைய அழகை அவசியம் பார்க்க வேண்டுமாக்கும்" என்பார்.
இதை அவர் அலட்சியமாகத்தான் சொல்வார். ஆனால் அது என்னை எவ்வளவுதூரம் வேதனைக்கு உள்ளாக்கி விடுகிறதென்பதை அந்தப் புண்ணியவான் அறிவதேயில்லை.
இப்படித்தான் சொல்கிறாரே, நாமே எதற்காக எடுத்துக்கொண்டு போவது என்று பேசாமலிருந்து விட்டாலோ, "தங்களைக் கேட்டால்தான் கொடுக்க வேண்டுமோ!" என்பார் எகத்தாளமாக.
எப்படி வேடிக்கை?
கடைசியில் இன்னும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே ஒரளவு வெட்கத்தை விட்டுச் சொல்லத்தான் வேண்டும். அது இதுதான்:-
இரவில் அவர் படுக்கையறைக்குள் நுழைந்ததும் நான் பாலை எடுத்துக் கொண்டு பின்னால் செல்வேன். பாலை மேஜையின் மேல்