யாருக்குப் பிரதிநிதி?
189
தரித்திரங்களைப் பற்றி எப்படியாவது வெளுத்து வாங்கி விடுவது என்றும், ரூஸ்ஸோவின் கூற்றைப் பொய்யாக்கி, மூன்றாவது மனப்பான்மையான மக்கள் மனப்பான்மையை இனி முதல் மனப்பான்மையாகக் கொள்வதென்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்.
என்றுமில்லாத விதமாக அன்று ஸ்ரீ அன்ன விசாரத்தைக் கண்டதும் மற்ற எம். எல். ஏ.க்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். ஸ்ரீ அன்னவிசாரம் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து விழித்தது விழித்தபடி நின்றார்.
"அன்னவிசாரத்துக்கு என்ன அப்பா அடிக்கிறது யோகம்!” என்றார் ஒருவர்.
"இனிமேல் நம்மையெல்லாம் அவர் எங்கே கவனிக்கப்போகிறார்" என்றார் இன்னொருவர்.
“எப்பொழுதாவது ஒரு சமயம் பேட்டியாவது அளிப்பாரோ, என்னமோ!" என்றார் மற்றும் ஒருவர்.
ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு ஒன்றும் தெரியாதா நீரும் ஒரு மந்திரியாகப் போகிறீர் ஐயா, மந்திரியாகப் போகிறீர்!" என்றார் ஒருவர்.
தூக்கி வாரிப் போட்டது ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ‘இதென்ன பிதற்றல் எந்த இலாக்காவும் காலியாக இருப்பதாகக் கூடத் தெரியவில்லையே’ என்றார் அவர்.
"இலாக்கா காலியாக இல்லாவிட்டால் என்ன? நீர் 'இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்து விட்டுப் போகிறீர்!" என்றார் ஒரு வயிற்றெரிச்சல்காரர்.
இப்பொழுதுதான் இந்த விஷயத்தில் ஏதோ உண்மை இருக்க வேண்டுமென்று தோன்றிற்று ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு. உடனே அவருடைய கவனம் அசல் தரித்திரங்களின் மீது சென்றது.
‘இந்தச் சமயத்தில் அந்த அசல் தரித்திரங்களைப் பற்றி நாம் இங்கே ஏதாவது உளறுவானேன்? சமுத்திரக்கரை அழகாக இருக்கவேண்டு மென்பது நகரத்துப் பெரிய மனிதர்கள், பிரமுகர்கள் ஆகியவர்களின் அபிப்பிராயம். அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது அரசாங்கத்துக்கு நல்லதா, அந்தத் தரித்திரங்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது