பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2OO

விந்தன் கதைகள்

வந்தவர்களும், தங்கள் தங்கள் தலையில் விளக்குகளைத் தூக்கி வைத்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் அல்லாப் பிச்சை ராவுத்தரின் கடையைச் சேர்ந்தவைதான். இந்த விளக்குத் தூக்கும் வேலையில் கண்ணுச்சாமியும், அவனுடைய நண்பானான முனிசாமியும் 'நிபுணர்கள்' என்று பட்டம் பெற்றவர்கள். ஆகவே, அவர்கள்தான் எல்லோருக்கும் முன்னால் காட்சியளித்தனர்.

வாணவெடிகளும் வாத்திய கோஷங்களும் முழங்க, சுவாமி மாட வீதியைக் கடந்து தேர் வீதிக்குத் திரும்பிற்று.

ஐயோ! இதென்ன? அந்தத் தெரு முனையிலிருந்த எல்லைக் கல்லைக் கண்ணுச்சாமி ஏன் கவனிக்கவில்லை? அவனுடைய கால்கள் ஏன் அந்தக் கல்லுடன் மோதிக் கொண்டன? பாவம், அவன் தொபுகடீரென்று அப்படியா விழ வேண்டும்?

அவன் தலைமேலிருந்த 'காஸ் லைட்'....? ஆயிரமாயிரம் சுக்கல்களாக வேண்டியதுதானே? அப்படியானால் கழுத்து வலிக்க, கைகள் நோக, கால்கள் கடுக்க, கண்கள் எரிய, வியர்வை துளிர்க்க அவன் விடிய விடிய அந்தப் பத்து நாளும் பாடுபட்டதெல்லாம் வீண்தானா?

நாளைக் காலை பொழுது விடிந்ததும் குழந்தையைத் துக்கித் தோளின் மேல் வைத்துக் கொண்டு, காத்தாயியுடன் கன குஷியாகக் கடைக்குச் செல்லலாம் என்று இருந்தானே!

இப்போது என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? அல்லாப் பிச்சை ராவுத்தர் இதற்கு என்ன செய்வார்?

சொல்வதென்ன?-இந்தப் பத்து நாளும் விளக்குத் தூக்கிய கூலி இருப்பது ரூபாயும் போக, மீதிக்கு "என்ன வழி?" என்று கேட்பார்.

"அதையும் தங்களிடமே வேலை செய்து தீர்த்து விடுகிறேன்!” என்றுதான் சொல்லித் தொலைக்க வேண்டும்.

அந்தப் பக்கிரிப் பயலின் முன்னால் நம் வீட்டில் தீபாவளி இல்லாமலா இருப்பது? குழந்தை அந்த அற்பப் பயலின் வீட்டுக்குப் போய்த்துணைக் கட்டிக் கொண்டா நிற்பது?

அட, கடவுளே! உனக்குத்தானே விளக்குத்துக்கினேன்?-இந்தக் கும்மிருட்டில் உன் திருமுகத்தை எல்லோரும் கண்டு களிக்கட்டும் என்றுதானே விளக்குத் தூக்கினேன்?-அதற்குப் பலன் இதுதானா?