பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் தேதி

247


கணேசனுக்கு மாதாமாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. அந்தச்சம்பளத்தைக் கொண்டு அவன் எவ்வளவோ செளகரியமாக வாழலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் நடைமுறையில் அது அசாத்தியம் என்று தோன்றிற்று. அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைச் செலவை எப்படியெல்லாமோ கட்டுப்படுத்திப் பார்த்தான். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது அவன் அடுத்த வீட்டுக்காரரையும், அவரையும் மிஞ்சியே அந்த 'நாலுபேரையும்' கொஞ்சம் அனுசரித்தே போக வேண்டியிருந்தது.

‘உண்டுண் டுறங்குவது தான் வாழ்க்கை’ என்ற கூற்றைக் கணேசன் ஒப்புக் கொள்ளவில்லை. அழகு எதிலிருந்தாலும், எங்கிருந்தாலும் அதை அனுபவிக்கும் திராணி அவனுக்கு இயற்கையாகவே இருந்தது. அடுத்த வீட்டுக்காரி நல்ல புடவையோ, நகையோ அணிந்திருந்தால் தன் மனைவியும் அணிய வேண்டும் என்று அவன் விரும்புவான். பக்கத்து வீட்டுக் குழந்தை ‘சாக்லெட்’ தின்றால் தன் வீட்டுக் குழந்தை அதனிடம் கையேந்திவிடக் கூடாது என்பது அவன் எண்ணம். எதிர் வீட்டுச் சிறுவன் சைக்கிள் விட்டால், தன் வீட்டுச் சிறுவன் அந்த ஸைக்கிளுக்காக ஏங்கி விடக் கூடாது என்பது அவன் ஆசை. இவை யெல்லாவற்றையும் விட, பாரத நாட்டின் பழம் பெருமையை விளக்கும் சின்னங்கள் எதுவாயிருந்தாலும் அவற்றைப் பார்க்க அவன்துடிதுடிப்பான்; அருங்கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வத்தையோ சொல்லி முடியாது.

இத்தகைய மனோபாவத்தின் காரணமாக அவன் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்ச நஞ்ச இன்பத்தையும் அனுபவிக்க முடியாமற் போயிற்று; துன்பம், துன்பம், துன்பம் என்று அவன் ஒரே துன்பத்தில் உழலவேண்டியதாயிற்று. அந்தத் துன்பம் ஒவ்வொரு முதல் தேதியும் உச்ச நிலையை அடையும்; முதல் தேதி வருவதற்கு ஒரு வாரம் இருக்கும்போதே, துன்பத்தின் சாயை அவனைத் தொடரும்.

அதன் கோர சொரூபத்திலிருந்து அன்றிரவாவது அவனால் தப்ப முடிந்ததாஎன்றால் அதுதான் இல்லை. ‘பத்துப் பதினைந்து ரூபாயில் மில் புடவைகளிலாவது இரண்டு எடுத்துக் கொடுக்கிறேன் என்கிறீர்களே, எடுத்துக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வந்தாள் மரகதம்.

"எங்கே எடுத்துக் கொடுப்பது? மாதம் பிறந்தால் தான் ஏதாவது ஒரு புதுத் தொல்லை வந்து சேருகிறது!" என்றான் கணேசன்.