பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

விந்தன் கதைகள்



'அப்பாடா!' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே கணேசன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.

‘ஸார்!' என்று குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்காரர் வந்தார்.

‘வாங்க ஸார் என்ன விசேஷம்?' என்று யாரை என்ன கேட்கிறோம் என்று தெரியாமலே கேட்டு வைத்தான் கணேசன்.

‘வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் மத்தியில் வேறு என்ன ஸார், விசேஷம் இருக்கும் தேதி இருபத்து மூன்று ஆகிவிட்டதோ’

'ஓ, அதுவா முதல் தேதியன்று ஆகட்டும் லார் இரண்டு மாத வாடகையையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். இந்த மாதம் காவேரி ஊரிலிருந்து வந்திருந்தாளோ, இல்லையோ - அதனால் கொஞ்சம் தாமதம்....'

'சரி; மறந்து விடாதீர்கள்!' என்று சொல்லிவிட்டு வீட்டுக்காரர் நல்ல வேளையாக அத்துடன் நழுவினார்.

அந்தச் சமயம் பார்த்துச் சலவைக்காரி வந்து அவனுக்கு எதிரே நின்று ‘மத்தியானம் சலவை கொண்டு வந்து கொடுத்தேனுங்க; இதோடு நாலு சலவை ஆச்சுங்க, அம்மா, காசுக்கு ஐயா வந்ததும் வான்னு சொன்னாங்க; அதுதான் வந்தேனுங்க’ என்றாள்.

‘காசுக்கு வேளை, நாழி, நாள், கிழமை ஒன்றும் கிடையாதா? நினைத்த போதெல்லாம் வந்துவிட வேண்டியதுதானா? போ, போ! முதல் தேதியன்று வா’ என்று அவளை விரட்டிவிட்டு, சற்று விக்ராந்தியாக இருந்துவிட்டு வரலாமென்று கணேசன் மாடிக்குச் சென்றான்.

அடுத்த வீட்டு மொட்டை மாடியில் சாப்பிட்டு விட்டு உலாவிக் கொண்டிருந்த சதாவதானம் கணேசனைக் கண்டதும் "ஸார் ஒரு சின்ன விஷயம் - நீங்கள் என்னிடம் ஒரு சமயம் ஐந்து ரூபாய் வாங்கினர்கள்; "மறந்தே போய் விட்டீர்கள்" என்று தலையைச் சொறிந்து கொண்டே சொன்னார்.

"மறக்கவில்லை, ஸார் வரப்போகிற முதல் தேதியன்று கட்டாயம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கணேசன் உடனே கீழே இறங்கி வந்து விட்டான்.

** *