பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

விந்தன் கதைகள்

சின்னசாமி, தன்தங்கை அஞ்சலையின் வாழ்க்கை நலனுக்காகத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்து அன்று பத்தாவது நாள். பொழுது விடிந்ததும் பல்லைதுலக்கிக் கொண்டு நெற்றியில் ‘சிவனே!’ என்று உச்சரித்தவண்ணம் விபூதி அணிந்து கொண்டான். கிழக்குத் திக்கை நோக்கி ஒரு முறை கைகூப்பிவிட்டு, அடுப்பங்கரைக்குச் சென்று உட்கார்ந்தான். பழைய சாதம் இருந்த பானையை எடுத்துக் கொண்டு, அவனுக்கு எதிரே வந்து உட்கார்ந்தாள் அவன் மனைவி. அவள் கையிலிருந்த இரண்டு பச்சை மிளகாய்களைத் தன் இடது கையில் பெற்றுக் கொண்டான் சின்னசாமி. அந்த மிளகாய் தான் ஏழைச் சின்னசாமிக்குப்பருப்பு, நெய், பொறியல், அவியல், கூட்டு எல்லாம். கையில் பழைய சாதத்தைப் பிழிந்து வைத்துக் கொண்டே, “மறந்துட்டேன், நேத்து ஒரு கடிதாசு வந்திச்சு, அதிலே பொங்கலுக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்குது; அனுப்பினா அதுக்குள்ளே அஞ்சலையை அனுப்புங்க, இல்லாட்டி அந்தப் பெண்ணே எனக்கு வேணாம்னு எழுதியிருக்காங்களாம்!” என்றாள் அவன் மனைவி.

அதற்காக ஏற்கனவே தான் திருட்டுச் சர்க்கரை வியாபாரத்தில் இறங்கியிருப்பதைப் பற்றி அவன் தன் மனைவியிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவளிடம் அதைச் சொல்ல அவனுக்கே வெட்கமாயிருந்தது. இப்பொழுதும் அதை மனதில் வைத்துக் கொண்டே, "அதற்கென்ன, நாளைக்கே எப்படியாச்சும் அனுப்பி வச்சுடலாம்" என்றான்.

அவன் நினைத்தது இப்படி; ஆனால் தெய்வம் நினைத்ததோ? - அதற்குத்தான் நாம் நினைப்பது போல் நடக்கத் தெரியாதே!

* * *

செட்டியாரின் திருட்டு வியாபாரத்தை எத்தனையோ நாட்களாகக் காத்து வந்தவரும், சின்னசாமியின் திருட்டுத் தொழிலுக்கு ஒன்பது நாட்கள் துணையாயிருந்தவருமான கடவுள் பத்தாவது நாள் மட்டும் கறுப்பு மார்க்கெட்டின் மூலம் பணக்காரரான செட்டியாரை விட்டு விட்டு, ஏழைச் சின்னசாமியை மட்டும் ஏனோ காட்டிக் கொடுத்து விட்டது.

கடைசியில் என்ன? மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் நீதிநெறியைக் கஞ்சிக்கில்லாத நிலையிலும் காப்பாற்றி வரும் போலீசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.