பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கமே தங்கம்

87

”இரு, இரு இதோ வந்துட்டேன்!” என்று சொல்லிவிட்டு, நந்தபாலன் ஆஸ்பத்திரியின் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு பெற்றுக்கொண்டு அந்த நிமிடமே அங்கிருந்து வெளியேறினான்.

வழியில், “தங்கம்! நீ எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டான்.

“நிஜமாகவே உனக்கு ஒரு சங்கதியும் தெரியாதா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள இருந்த கோபாலக் கோனான் மகன் செத்துப்பூட்டான். என் பொல்லாத ஜாதகத்தாலேதான் அவன் செத்துப்புட்டான்னு ஊரிலே எல்லாம் ஒரே பேச்சு. அதாலே வேறே ஒருத்தனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க வரலே. அவன் அப்பன் எப்படியாச்சும் நம்ம கடன் வந்தாப் போதும்னு கோர்ட்டிலே வழக்கைப்போட்டு, எங்க அப்பாவுக்கு இருந்த நிலபுலம், ஆடுமாடு எல்லாத்தையும் ஜப்தி சேஞ்சுப்போட்டான். இந்தக் கஷ்டத்தையெல்லாம் தாங்க முடியாம எங்க அப்பாவும் செத்துப்பூட்டாரு. இப்போ எங்க அம்மாவும் நானும் ஊரிலே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராதுன்னு இந்த ஊருக்கு வந்து கூலி வேலை சேஞ்சி பிழைச்சுக்கிட்டு வாரோம் என்று சொல்லிச் சோகமே உருவாய் நின்றாள் தங்கம்,

“அப்படியா சங்கதி? அத்தனை கஷ்டத்திலும் என் பாட்டை மட்டும் நீ மறக்கலையே!” என்று வியந்தான் நந்தபாலன்.

“எப்படி மறப்பேன்?” என்றாள் தங்கம்.

இப்படிப் பேசிக்கொண்டே தங்கம் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வழியில் நந்தபாலனின் கதையைக் கேட்ட தங்கம், தணலைக் கண்ட தங்கம் போல் உருகினாள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் நந்தபாலனைக் கண்ட தங்கத்தின் தாயார் தன்னை மறந்து நின்றாள். தங்கம் மூச்சுவிடாமல் அவனுடைய கதையைத் தன் தாயிடம் சொன்னாள். அதைக் கேட்ட அவள் “அப்பாடா! எப்படியோ நீ என் வீட்டைத் தேடி வந்துட்டே! இனிமேல் என்கஷ்டம் தொலைஞ்சுது!” என்றாள்.

“என்ன கஷ்டம் தொலைஞ்சுது?’ என்று கேட்டாள் தங்கம்.

“எல்லாம் உன் கல்யாணக் கஷ்டந்தான்” என்றாள் அவள்.

அப்பொழுது நந்தபாலனைப் பார்த்த தங்கத்தின் அகன்ற விழிகள், “உஷார்! இங்கே என் அம்மா இருக்கிறாள்!” என்று அவனை எச்சரிப்பது போலிருந்தன.