பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

விந்தன் கதைகள்

வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக நடையைக் கட்டினார் அவர்.

'செக்' கை எடுத்துக்கொண்டு கவிஞர் ஒன்பாற் சுவையார் வேறெங்கும் போய்விடவில்லை; அடியேனைத்தான் தேடிக்கொண்டு வந்தார். நான் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு செக்கை வாங்கிப் பார்த்தேன்; 'கிராஸ்' செய்த செக்காயிருந்தது. "இது பணமாக இரண்டு நாட்களாவது ஆகுமே?" என்றேன்.

"நாளைக் காலை பத்து மணிக்கன்றோ அன்னார் எனக்கு வண்டி அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்? அதற்குள் யாம் வாங்கவேண்டியவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு தீர வேண்டிய நிலையிலன்றோ உள்ளோம்?" என்றார் கவிஞர்.

"அதனாலென்ன, உங்களுக்கு வேண்டியவற்றை யெல்லாம் யாரிடமாவது இரவல் வாங்கிக்கொண்டு விட்டால் போகிறது!"

"நகை நட்டுக்கள் இரவலாகக் கிடைக்கலாம்; ஸில்க் ஜிப்பா ......"

"அதுகூடச் சலவை நிலையங்களில் வாடகைக்குக் கிடைப்பதாகக் கேள்வி!"

"அதற்குரிய தொகையையாவது உம்மால் கொடுத்து உதவ முடியுமா?"

"தருகிறேன்!"

"அங்ஙனமே 'ஸெண்ட் பாட்டில்' ஒன்றும்....."

"வாங்கித் தருகிறேன்!"

"அடுத்து, உருப்படாத சீடன்......"

"ஏன் உருப்படும் சீடனாயிருந்தால் என்னவாம்?"

"அவன் என்னையே - கவிழ்த்து விட்டாலும் கவிழ்த்துவிடலாமன்றோ?"

"அஞ்சற்க! உருப்படாத சீடன் ஒருவன் கிடைக்கும் வரையாமே உமக்கு இரவல் சீடனாக இருந்து வருவோம்!"

"மகிழ்ச்சி! நாளைக் காலை ஒன்பது மணிக்கெல்லாம் எமது இல்லத்துக்கு வந்துவிடும்; இந்தச் செக்கையும் உமது கணக்கிலேயே கட்டிவிடும்!"