பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாளை நம்முடையதே

வழக்கம்போல் வேலை தேடித்தரும் நிலையத்திற்குச் சென்று, வழக்கம் போல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த வைகுந்தன், வழக்கம்போல்துண்டை விரித்துப் போட்டுச்சத்திரத்தில் படுத்தான்.

அப்போது கையில் காலிக் கப்பரையுடன் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த கைலாசம், "நண்பா, சாப்பிட்டு நான்கு நாட்களாகி விட்டன; இன்றும் ஒரு பருக்கை கூடக் கிடைக்க வில்லை!" என்றான் பெரு மூச்சுடன்.

"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

"கட்டத்துணியில்லை; வாங்கக் காசில்லை..."

"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

“படுக்கப்பாயில்லை; இருக்க நமக்கென்று ஓர் இடமில்லை..."

"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

இந்த நம்பிக்கையையே அவர்கள் வழக்கம் போல் உணவாகவும், உடையாகவும், வீடாகவும், வாசலாகவும் கொண்டு வழக்கம் போல் தூங்கி விட்டார்கள்.

வழக்கம் போல் மறுநாள் பொழுது விடிந்தது. ஆனால் சத்திரத்துக்கு எதிர்த்தாற்போலிருந்த காண்ட்ராக்டர் கந்தையாவின் வீடு மட்டும் அன்று வழக்கம் போல் காணப்படவில்லை; வழக்கத்துக்கு விரோதமாக அந்த வீட்டு மாடியில் தாயின் மணிக்கொடி தகதகாய்த்துப் பறந்தது.

“என்ன இன்றைக்கு?" என்றான் கைலாசம் ஒன்றும் புரியாமல்.

"சுதந்திர தினம் நண்பா, சுதந்திர தினம்!"

"ஓஹோ! இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. நேற்றே நான் இதைக் கேள்விப்பட்டேன்!"

"கேள்விப்பட்டாயா? ஏன், இது உனக்கே தெரியாதா?"

“எங்கே தெரிகிறது! எனக்குத்தான் பட்டினி சுதந்திரத்தைத் தவிர வேறெந்தச் சுதந்திரமும் தெரியவில்லையே?"