பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவர்கள்

535

"பத்து என்ன பதினாயிரம் குடிசைகள் கூடப் போட்டுக் கொடுக்கலாம், படிக்காத பதர்களுக்கு! நீ பார், எழுபத்தைந்தாம் நம்பர் வீடு எங்கே இருக்கிறதென்று?" என்றான் கண்ணாயிரம், வெறுப்புடன்.

"இங்கே ஒரு நம்பரையும் வெளியே இருந்தபடி பார்க்க முடியவில்லையே?"

"நம்பரைப் பார்க்க முடியாவிட்டால் என்ன, 'வள்ளி நாயகம் பி.ஏ.,பி.எல்,' என்று போர்டு' போட்டிருக்கும், பார்!"

அப்படியே அங்கிருந்த போர்டுகளையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தான் முருகையன், "நாய்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை!" என்று நாலைந்து போர்டுகளில் எழுதியிருந்ததைப் பார்த்தும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "என் அப்பா, இங்கே மனிதர்கள்தானே வசிக்கிறார்கள்?" என்றான் சந்தேகத்துடன்.

"மனிதர்கள் வசிக்காமல் நாய்களா வசிக்கும்?"

"அப்படித்தான் இங்கே எழுதியிருக்கிறார்கள்!"

"இருக்காது; எச்சில் இலை நக்கும் நாய்களுக்கு இவ்வளவு பெரிய பங்களாக்கள் இருக்கவே இருக்காது!"

"பட்டணத்திலே அப்படி நினைப்பதற்கில்லை அப்பா இங்கே படித்தவர்கள் கூட எச்சில் தட்டை நக்குகிறார்களாம்; அதற்கென்று அவர்கள் அங்கங்கே வைத்திருக்கும் கடைகளுக்கு ஓட்டல் என்று பெயராம்!"

"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்து மாட்டார்கள்!"

"அது என்னமோ உண்மைதான், அப்பா அவர்கள் எதையும் தெரிந்துதான் செய்கிறார்களாம்"

"அப்புறம் என்ன? விடு, கதையை; தேடு, வக்கில் வள்ளநாயகம் வீட்டை!" என்றான் கண்ணாயிரம்.

இந்தச் சமயத்தில் 'ஹாட்'டும் 'ஸுட்'டும் அணிந்த ஒருவர் எதிர்த்தாற்போல் வர, அவரை நோக்கி முருகையன் கேட்டான்.

"இங்கே வக்கீல் வள்ளிநாயகத்தின் வீடு எங்கே இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா!”

"என்னை மன்னியுங்கள், எதிர்த்த வீட்டுக்காரர் என் மனைவியை அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிப் போலீசில் புகார் செய்ய நான் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்