பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



558

விந்தன் கதைகள்

"முடியாது, உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன்!” என்றது ரங்கா.

அவ்வளவுதான்; வெளியே யிருந்த கிளி பொறுமை இழந்து உள்ளே நுழைந்தது. அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இரண்டும் ஒன்றை யொன்று அலகால் குத்திக் கொள்வதும் சிறகால் அடித்துக் கொள்வதுமாக இருந்தன. பலவந்தமாக வெளியே தள்ளப்பட்ட ரங்கா, அந்தக் கிளியின் எதிர்ப்பை மீறி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தது. எனக்கோ அதனுடைய அதர்மக் காட்சியில் சேர மனமில்லை, ஆகவே, துணைக்கு வரவில்லை என்பதற்காக அது என்னைத் திட்டியதையும் நான் பொருட்படுத்தாமல் நான் இருந்த இடத்திலேயே இருந்தேன்!

போராட்டம் நீடித்தது!

அந்த நீடித்த போராட்டத்தை நானும் நீடித்த மழையில் நனைந்த வண்ணம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் சிறகுகளெல்லாம் நனைந்து உடம்பு 'வெடவெட' வென்று நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்த நடுக்கத்தில் கிளையை விட்டுத் தவறிக் கீழே விழுந்து விடுவோமோ என்று கூட நான் பயந்து போனேன். ஆயினும் என்ன செய்வது? - ரங்காவைப் போல் நானும் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதா?

"வேண்டாம்; நடப்பது நடக்கட்டும்" என்று நான் பேசாமலிருந்தேன். எனக்கு எதிர்த்தாற் போல் பொந்துக்குள் இருந்த கிளியோ, அடிக்கடி வெளியே தலையை நீட்டி என்னை பரிதாபத்துடன் பார்ப்பதும், பதவிசு போல் உள்ளே சென்று விடுவதுமாக இருந்தது.

இப்படியே இருப்பதற்கு அதனுடைய அந்தராத்மா இடம் கொடுக்கவில்லையோ என்னமோ, சிறிது நேரத்திற்கெல்லாம் அது தலையை பலமாக ஆட்டி என்னை 'வா, வா!" என்று அழைத்தது. நான் அதன் அருகே சென்றேன். "இப்படி மழையில் நனைந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? உள்ளே வந்துவிடு!" என்று அது கரிசனத்துடன் சொல்லிற்று.

என்னால் நம்ப முடியவில்லை. "நிஜமாகவா சொல்கிறாய்?" என்று கேட்டேன்.

"ஆமாம், நிஜமாகத்தான்" என்றது அது அன்புடன்.