பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

590

விந்தன் கதைகள்

அட, பாவி! சாகும்போது கூட ‘சொந்த நிதி'யைத் தவிர வேறு 'எந்த நிதி'யையும் எதிர்பார்க்காத சண்டாளா! கடைசியில் இந்த முடிவுக்கா வந்துவிட்டாய் நீ? தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோ சிலர் தமிழைக் காப்பாற்றப் போவதாகச் சொல்ல, அதற்காக நீ உன் உயிரையா கொடுக்கப் போகிறாய்? - ஐயோ! என்றும் குன்றாத தமிழுக்கு, இன்றுவரை எதனாலும் பாதிக்கப்படாத தமிழுக்கு, இப்படி ஓர் இழுக்கா? அந்த இழுக்கும் ஒரு பாவமும் அறியாத உன்னாலா அதற்கு ஏற்படுவது? இது கூடாது; இதை நடக்கவிடக் கூடாது!

இப்படி நினைத்ததும், "கதவைத் தாளிட்டுக்கொள்; இதோ, நான் வந்து விடுகிறேன்!" என்று தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிய நான், எதற்கும் 'தக்கதுணை'யொன்று இருந்தால் நல்லது என்று எண்ணி, எங்கள் தெருவில் 'தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு' ஆக ‘நால்வகைக்கன்னி'களுடன் - 'எங்கே உங்கள் திராவிட நாடு?' என்று யாராவது ஓர் அதிகப்பிரசங்கி கேட்டால், 'இதோ இருக்கிறது எங்கள் திராவிட நாடு!' என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொல்வதற்காகத்தானோ என்னவோ, 'எழுந்தருளி யிருந்த 'தமிழ்ப்புயல் தயாநிதி'யைக் கொஞ்சம் தயக்கத்துடனேயே தட்டி எழுப்பினேன்.

அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த அவர் "என்ன சங்கதி, எதற்கு என் இனிய தூக்கத்தைக் கெடுத்தீர்?" என்றார் சற்றே 'பைரவ'ரைப் பின்பற்றி.

"மன்னிக்க வேண்டும்; நேற்று வரை தமிழ்ப் புயலாயிருந்த தாங்கள் இன்றைய 'துக்க தின'த்தை இப்படித் 'தூக்க தின'மாகக் கொண்டாடலாமோ? எழுந்திருங்கள், தங்கள் தலையாய தொண்டன் தமிழ்மாறன் தமிழுக்காகத் தன் இன்னுயிரையே ஈயப்போகிறானாம். அந்தத் 'தற்குறி'யைத் தடுத்தாட்கொள்வது தங்கள் கடமையன்றோ? வாருங்கள், என்னுடன்" என்றேன் நான் பணிவுடன்.

அவ்வளவுதான்; அவர் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்புச் செய்தி! ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்பச் செய்தி!" என்று ஒரு கணம் ஆனந்தக் கூத்து ஆடிவிட்டு, மறுகணம் "ஒரு வினாடி பொறும்!" என்று சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக எங்கோ ஓடினார்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை; "தலைவர் எவ்விடம் செல்கிறாரோ?" என்றேன், அவரைச் சற்றே தடுத்து நிறுத்தி.