பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

616

விந்தன் கதைகள்

அதனாலென்ன, இது அயலூர்தானே? இங்கே யார் தன்னைக் கவனிக்கப் போகிறார்கள்? - படுக்கையைத் தூக்கித் தோளின்மேல் வைத்துக்கொண்டு, பெட்டியை எடுத்தான் நடக்க!

இரண்டடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம்-இந்தக் கால்கள் ஏன் இப்படிப் பின்னுகின்றன?- தோள்தான் கனக்கிறது, படுக்கையைச் சுமப்பதால்; கைதான் வலிக்கிறது, பெட்டி தன்னை இழுப்பதால் - இந்தக் கால்கள் எதைச் சுமக்கின்றன? ஏன் இப்படிப் பின்னுகின்றன?

அதைப் பற்றி யோசிக்கும் அளவுக்குக்கூட அவனை விடவில்லை, அவனுடைய கால்கள் - ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ‘நடந்தா போகப் போகிறாய், நடந்து!' என்று சொல்லாமல் சொல்லி அவனைக் கீழே தள்ளிவிட்டுச் சிரிக்காமல் சிரித்தன!

"நல்ல யோசனைதான், சாமி! பெட்டி, படுக்கையை மேலே போட்டுக்கொண்டு விழாமல், கீழே போட்டுவிட்டு விழுந்தீர்களே? நல்ல யோசனைதான், சாமி!" என்று அவனைப் பாராட்டினான் ஒரு ரிஷாவாலா.

"இல்லேன்னா, சாமியின் மூஞ்சி சைனாக்காரன் மூஞ்சியாப் போயிருக்காதா?" என்றான் இன்னொரு ரிஷாவாலா.

"விழவே விழுந்தாரு; அந்தப் பிள்ளையார் கோயில் பக்கமாப் பார்த்து விழுந்திருக்கக் கூடாதா? போற வழிக்காச்சும் புண்ணியம் கிட்டியிருக்கும்!" என்றான் அவன்.

"இப்போ மட்டும் என்னவாம்? எழுந்ததும் மூணு சுத்துச் சுத்தி, மூணு குட்டுக் குட்டிகிட்டாப் போச்சு!" என்றான் இவன்.

'பழி தீர்த்துக் கொள்கிறார்கள்; தங்களைக் கூப்பிட வில்லை என்பதற்காக இவர்கள் தன்னைக் கேலி செய்து பழி தீர்த்துக் கொள்கிறார்கள்!' என்று முனகிக் கொண்டே எழுந்தான் அரசு.

பேசாமல் இவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் என்ன? - அதற்கும் குறுக்கே நின்றது மனிதாபிமானம்

என்ன மனிதாபிமானம் வேண்டிக் கிடக்கிறது, இதற்கு மட்டும்? ஒருவேளை உணவுக்குக் கூட வழியின்றி எத்தனையோ பேர் பட்டினியாயிருக்க, தான் மட்டும் நாள் தவறாமல் நாலு வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வில்லையா? அப்போது எங்கே போய் ஒளிந்து கொள்கிறது, இந்த மனிதாபிமானம்?