பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூலி வேண்டுமா, கூலி?

617

பார்க்கப் போனால், அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதுதானா மனிதாபிமானம்? வேலை கொடுப்பது மனிதாபிமானம் இல்லையா?

ஏன் இந்தக் குழப்பம்?-இவர்களில் ஒருவனைப் பிடிப்பதற்குப் பதிலாக யாராவது ஒரு ஸைக்கின் ரிக்ஷாக்காரனைப் பிடித்துக்கொண்டு விட்டால்?- தேவைக்குத் தேவையும் தீரும்; மனிதாபிமானத்துக்கு மனிதாபிமானமும் பிழைக்கும்!

சுற்று முற்றும் பார்த்தான் அரசு; குறிப்பறிந்து ஸைக்கிள் ரிக்ஷாக்காரன் ஒருவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

"ஹால்ஸ் ரோடுக்கு வருகிறாயா?"

"இந்த மூலையிலா, அந்தக் கடைசியிலா?"

"இந்த மூலையிலேதான்!"

"ஒரு ரூவா கொடுப்பியா?"

"பக்கத்தில்தானே இருக்கிறது, அதற்குப் போய் ஒரு ரூபா கேட்கிறாயே?"

"பக்கத்தில் உன் பெண்டாட்டிதான் இருப்பா; ஹால்ஸ் ரோடு இருக்காது - போய்யா, போ!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.

மேலே என்ன. செய்வதென்று தோன்றவில்லை, அரசுக்கு-இருபத்திரண்டாவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான்; மணி ஒன்பதரை!

இந்தச் சமயத்தில், 'எங்கள் உதவி உங்களுக்குத் தேவையா?' என்று கேட்டுக் கொண்டே யாராவது ஒரு போலீஸ்காரன் தனக்கு உதவ முன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

இப்படி நினைத்தானோ இல்லையோ, அவனுக்கு எதிர்த்தாற் போல் ஒரு போலீஸ்காரர் வந்தேவிட்டார்!

ஆனால்........

"அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாதே!" என்று அவனுடைய 'அதிகப் பிரசங்கி'த்தனத்துக்கு அப்பொழுதே ஓர் அணையிட்டு வைத்தான் அரசு.