பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும்.....

631

அவளைத் தொடர்ந்து வந்த வாசு, "நல்ல வேளை இன்றாவது என்னைக் கண்டதும் கதவை அடைக்காமல் விட்டாயே? ரொம்ப சந்தோஷம்/" என்றான் தன் பேச்சையும் மேலே தொடர்ந்து.

ஆம்; ஏற்கெனவே சூடு கண்ட பூனைதான் அவன். ஆனாலும் அப்போதிருந்த நிலையில் அந்தப் பூனையை ஏனோ' விரட்ட விரும்பாத ஹேமா, அதற்கும் மெளனமாக இருக்கவே, "இன்று உன் வீட்டுக் கதவு திறந்தது போல் நாளை உன் மனக் கதவும் திறந்தால்?" என்று தன் பேச்சைமேலும் தொடர்ந்த வாசு, 'அதற்கு மேல் வார்த்தை என்னத்துக்கு?' என்று எண்ணித்தானோ என்னமோ, தன்னுடைய நீண்டகால வேட்கையை ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் வெளிப்படுத்தினான்.

தன் பிடரியைத் தொட்டுச் சென்ற அந்த வெதவெதப்பான மூச்சுக் காற்றிலே ஏதோ ஓர் இதத்தைக் கண்ட ஹேமா சற்றே திரும்பி, "அன்றுபோல் இன்று நான் கன்னி அல்ல வாசு, கைம்பெண்!" என்றாள் மெல்ல.

"இருக்கலாம்; வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத வறட்டுச் சித்தாந்தவாதிகளுக்கு, அன்று நீ கன்னியாகவும், இன்று நீ கைம்பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு? அன்றும் நீ கன்னிதான்; இன்றும் நீ கன்னிதான்; என்றும் நீகன்னிதான்!" என்றான் அவன், தனக்கே உரித்தான சவடால், தனத்துடன்.

"நிஜமாகவா சொல்கிறாய்?"

"சத்தியமாக!"

"அப்படியானால்........?"

அவள் முடிக்கவில்லை; அதற்குள், "நீ 'ம்' என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி; நாளைக் காலை நான் டாக்ஸியுடன் வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டுவேன்!" என்றான் வாசு.

"எதற்கு?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் ஹேமா.

"இப்படியும் ஒரு பெண் கேட்பாளா, இந்தக் காலத்தில்? வேறெதற்கு, பதிவாளர் அலுவலகத்துக்குப் போய்ப் 'பதிவுத் திருமணம்' செய்து கொள்ள!" என்றான் அவன், சிரித்துக்கொண்டே.

அவள் சிரிக்கவில்லை; அதற்குப் பதிலாக, "அவ்வளவு அவசரம் வேண்டாம், வாசு! எதற்கும் நீ இன்னும் கொஞ்ச நாள் பொறு: அதற்குள் நான் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்!" என்றாள் அவள், தன் கண்களில் ஏதோ ஓர் இனம் தெரியாத பீதி தேங்க.