பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



384

விந்தன் கதைகள்

கேவலம், ஒரு சாத்துக்குடிப் பழம் தின்ன வேண்டுமென்றால் அதற்காக அவளுக்கு ஜூரம் வரவேண்டியிருக்கிறது; வைத்தியர் சிபாரிசு செய்யவேண்டியிருக்கிறது!? மிக மிகப் பரிதாபமாக அல்லவா இருக்கிறது இது?

இன்னும் எத்தனை வருடங்கள்தான் அவள் தன்னைக் கல்லாகவும் புல்லாகவும் கருதி 'பக்தி' செலுத்துவது? என்றைக்காவது ஒரு நாள் அவள் தன்னைக் கணவன் என்ற உருவில் பார்த்துக் 'காதல்' கொள்ள வேண்டாமா? அந்தக் கணவனுக்குரிய கடமைகளைத் தான் செய்ய வேண்டாமா?

குழந்தை-அதனிடம் ஒரு தனி இன்பம் இருக்கிறது என்கிறார்கள். எங்கே அந்தப் பாழும் இன்பத்தைத் தன் வீட்டில் காணோமே!- பிறந்தாலும் கஷ்டமாக யிருக்கிறது; இறந்தாலும் கஷ்டமாயிருக்கிறதே!

இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?-உண்டு; நிச்சயம் உண்டு.

எப்பொழுது? மரணத்திலா?

சீசீ, அதுவரை இனி பொறுத்திருக்கக்கூடாது.அதற்கு முன்னால் ஒருநாள்-ஆம், ஒரே ஒரு நாளாவது மனைவி மக்களுடன் சுகமாயிருக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தே யாகவேண்டும்-அதற்குள்ள ஒரே வழி திருடுவதுதான்!

அதையும் இப்போதே, இன்றே செய்துவிட வேண்டும். அப்போதுதான் வரப்போகும் பொங்கலைக் குதுகலமாகக் கொண்டாட முடியும்...!

எங்கே, யாருடைய வீட்டில் திருடுவது?

மிஸ்டர் ஹரன்.....மிஸ்டர் ஹரன்.....

ஆம், அவருடைய வீட்டில்தான் திருட வேண்டும். தலை முறை தலைமுறையாக வல்லவா அவர்கள் நகத்தில் மண்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

அவர்கள் வேலைக்குப் போவதும் கிடையாது; அவர்களை யாரும் வீட்டுக்கு அனுப்புவதும் கிடையாது- அதிசயமாயில்லையா, இது? நாமும் பொங்கலுக்குத் தானே செலவழிக்கப் போகிறோம்?

அப்புறம் கேட்கவேண்டுமா?-அந்த வருடம் கன்னையாவின் வீட்டில் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.