உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வீரர் உலகம்

பொருள். திருக்குறளில் இந்த உயர்ந்த பண்பைப் பாராட்டும் பாடல் ஒன்று உண்டு.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”[1]

‘பகைவரிடம் மிடுக்குடன் போர் செய்தல் பெரிய வீரம்; ஆனால் பகைவனுக்கு ஒரு சோர்வு வந்தால் அப்போது கருணையோடு உதவுதல் அந்த வீரத்தின் கூர்மையான பகுதி’ என்பது இதன் பொருள். தன் வீரம் தோற்றப் போர் செய்வது பேராண்மை; ஆனால் பகைவன் சோரும்போது அவனைக் கொல்லாது விடுதல் அந்தப் பேராண்மையிலும் சிறப்பான வீரம் என்பது கருத்து.

இராமன் இராவணனோடு போர் செய்த முதல் நாள் இறுதியில் அவ்வரக்கன் தன் படைக்கலங்களை இழந்து நின்றான். வெறுங்கையாக நின்ற அவனை ஒரு கணத்தில் கொன்றிருக்கலாம். ஆனால் சிறந்த வீரனாகிய இராமன் அவ்வாறு செய்யவில்லை. ‘நீ ஆள்வதற்கு இப்போது ஒன்றும் இல்லை. உனக்கு அமைந்திருந்த பலம் எல்லாம் காற்றிலே குலைந்துபோன பூளைப் பூப்போல ஆயின; இதை நீயே பார்த்தாய். இன்று போய் இளைப்பாறி, மறுபடியும் போர் செய்ய வேண்டுமென்று எண்ணினையாயின் நாளைக்கு வா’ என்று சொன்னானாம். இதனைக் கம்பன் பாடுகிறான்:

ஆள யாஉனக் கமைந்தன
     மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை;
     இன்றுபோய்ப் போர்க்கு


  1. திருக்குறள், 773.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/39&oldid=1849330" இலிருந்து மீள்விக்கப்பட்டது