78
வீரர் உலகம்
மதுரைமா நகரில் முன்பு பெரிய மதில் இருந்ததாகத் தெரிகிறது. வையையாறு ஒரு பக்கத்து மதிலைப்போல இருந்ததென்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
“மதிமலி புரிசை மாடக் கூடல்” என்று தொடங்கும் திருமுகப் பாசுரத்தில் மதுரையின் மதிலைப்பற்றி, “மதிமலி புரிசை” என்று அதைப் பாடிய ஆலவாய் இறையனார் சொல்கிறார்.
பகையரசன் மதிலை முற்றுகையிடும்போது அவனை எதிரிட்டுப் போர் புரிந்து அதனைப் பாதுகாக்கும் போர்ப் பகுதியை நொச்சித் திணை என்று புறத்திணையில் எடுத்துச் சொல்வார்கள். மதிலுக்கு உள் இருந்து பாதுகாப்போரை அகத்தோர் என்றும் முற்றுகையிட்டோரைப் புறத்தோர் என்றும் வழங்குவர். மதிலுக்குள் இருந்து காவல் புரிவோர் நொச்சிப் பூவை அணிந்து கொள்வர். அதனால் நொச்சித் திணையென்று அகத்தோனுடைய மதிற்போர்ச் செய்திகளுக்குப் பெயர் வந்தது. நாளடைவில் நொச்சி என்பதற்கே மதில் என்ற பொருள் வந்துவிட்டது.
தொல்காப்பியர் மதிலை முற்றுகையிடுதல், காத்தல் இரண்டையும் உழிஞை என்பதில் அடக்குவர். அகத்தோன், புறத்தோன் என்னும் இருவருக்கும் சிறப்பாக உள்ள துறைகளையும் பொதுவாக உள்ள துறைகளையும் சொல்கிறார்.
★
மதிலை முற்றுகையிடுவதற்குப் பகைவர்கள் வந்து விட்டார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் மதிலுக்குள் இருப்பவர்கள் அதைப் பாதுகாப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்கிறார்கள். மதிலின் உறுப்புக்கள் ஒழுங்காக