உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. மதில் காவல் போர்

79

இருக்கின்றனவா என்று ஆராய்ந்து, பகைவர் உள்ளே மறைந்து வருவதற்கும், மதிலின்மேல் ஏறி வருவதற்கும் இடம் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். அரசனும் படைத் தலைவரும் பிறரும் நொச்சிப் பூவை அணிந்துகொள்கிறார்கள். பகைவர் எவ்வளவு காலம் முற்றுகையிட்டாலும் தாக்குப் பிடிப்பதற்கு வேண்டியபடி பண்டங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் காவற்காட்டிலே பகைவர் புகுதாதபடி மதிலுக்குப் புறம்பே வந்து ஒரு வீரர் கூட்டம் போராடுகிறது. அகழியிலே வராதபடி ஓட்டுகிறது. மதிலுக்கு அருகில் வந்து முற்றுகையிடுவதற்கு இடம் கொடுக்காமலே புறத்திலிருந்து ஓட்டிவிட்டால் மதிலுக்கு எந்த விதமான சிறிய ஊறுபாடும் நிகழாது அல்லவா? அப்படிக் காவற்காட்டைக் காத்துப் பகைவரோடு போர் செய்த சில வீரர்கள் களத்தில் வீழ்கிறார்கள். இந்த உடம்பு என்றைக்கேனும் ஒரு நாள் இறந்துபடுவது தான். நோய் வந்து இறவாமல் பகைவரைப் பொருது வீரங் காட்டுகையில் உயிர் விடுவதைப் பெரிதாக எண்ணுவர் சுத்த வீரர். அத்தகைய வீரர்களை மற்றவர்களும் பாராட்டுவார்கள்.

அகழியையும் காவற்காட்டையும் காத்து, எதிர்த்த பகைவரோடு பொருது வீழ்ந்த மறவரைப் பாராட்டுகிறது புறப்பொருள் வெண்பா மாலை, பிணங்கிய கொடிகளும் புதர்களும் நிரம்பியது காவற்காடு. தாமரை முதலிய பூக்கள் மலர்ந்திருப்பது அகழி. இந்த இரண்டையும் காவல் புரியும் கடமையைக் கொண்டவர்கள் சிங்கம் போன்ற வீரர்கள்; வேலை ஏந்திய மறவர்கள். அவர்களுக்குக் காவல்காட்டையும் கிடங்கையும் பகைவரிடம் அகப்படாமல் காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்; தம் உடம்பையும் உயிரையும் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/86&oldid=1848309" இலிருந்து மீள்விக்கப்பட்டது