8
வெங்கலச்சிலை
இவ்வையகத்தை ஒருவன் கட்டியாள முடியுமானால், அவனுக்கு அந்த உரிமையை அளித்தவன் யார்? தேவ கட்டளையானால், தேவனால் கொடுக்கப்பட்ட பட்டயமெங்கே? என்றெல்லாம் கேட்டான்.
இது ஜார் அரசாங்கத்துக்குச் செய்யும் பகிரங்கச் சதி என்றனர். எங்கும் பரபரப்பு, எப்பக்கமும் ஒற்றர்கள். ஏவலாட்களும், எடுபிடியாட்களும் ஜாடையாகப் பேசாத நேரமில்லை. சீறி எழுந்தான் ஜார். சிங்காதனம் குலுங்கியது. "கயவனைக் கட்டிக்கொண்டு வரவேண்டும்," இது, காவலனின் கண்டிப்பான உத்திரவு காலாட்படைகளுக்கு. அரண்மனை, அந்தப்புரம், அவைக்களம், அலுவலகம், அங்காடி, அறமன்றம், ஆகிய எல்லா இடங்களிலும் இதே பேச்சு.
தலைமறைந்து திரிந்தான். தனக்காக அல்ல. தரையில் ஊர்ந்து செல்லும் புழுக்களைக் காட்டிலும் கேவலமாக வாழ்ந்து மக்களுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டான். ஆனால் அந்தப் புரட்சி வேந்தனுக்கு உற்ற நண்பனாயிருந்தது சைபீரியப் பாலைவனமும், சிறைச்சாலையுந்தான். ஓடியொளிவதற்கு உறுதுணை செய்தது. தன்னைத் தேடிவந்த ஒற்றர்கள் ஆரோகணித்து வந்த குதிரைகளின் குளம்படிச் சத்தமும், அவைகள் காற்றோடு கலந்துவிட்ட கருந்தூளும் செந்தூளுந்தான், பலமுறை அவன் உருமாறித் திரிந்த போதெல்லாம் பதுங்க இடமாயமைந்தது ஒரு ஏழையின் இருட்டறை, அந்த மண்குடிசை வாழ் ஏழை இவனுக்களித்த உறுதியும் ஊக்