பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



39. காதலன் கலைநலம்

தயணனோடு பேசுகிறபோதும், பழகுகிறபோதும் அவன் ஏதோ அரசகுலத்திற் பிறந்த ஓர் இளைஞன் என்ற எண்ணமே இயல்பாகப் பதுமைக்கு ஏற்பட்டது. அவனே தன்னிடத்தில் கூறியிருந்தபடி மாணகன் என்ற அந்தண இளைஞனாக அவனை அவளால் எண்ண முடியவில்லை. அவனோடு பழகப்பழகத் ‘தான் ஓர் அந்தண இளைஞன் என்று அவன் கூறியது பொய்’ என்பதாக ஒரு விதமான நம்பிக்கையும் அவளை யறியாமலே அவள் உள்ளுணர்வில் கலந்து வளர்ந்து வந்தது. அவன் வேண்டுமென்றே உண்மையைத் தன்னிடம் மறைப்பதாகத் தோன்றியது அவளுக்கு. சொல்லும், செயலும், எடுப்பான தோற்றமும், திருநிறைந்த முகச் சாயலும் ஆகிய யாவும் சேர்ந்து உதயணனின் மாறு வேடத்தில் அவளுக்கு ஐயத்தைத் தோற்றுவித்திருந்தன. அந்த ஐயத்திற்கு உரிய விவரமான விடைதான் அவளுக்குப் புரியவில்லை! ‘எதற்கும் அவனுடைய கலைத்திறனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்’ என்ற கருத்துடன் தன் தோழியாகிய யாப்பியாயினியின் துணையை அதற்காக நாடினாள். மாடத்திலுள்ள பள்ளியறையில் அப்போது பதுமை இருந்தாள்.

நண்பகற்போது ஆகியிருந்தது. யாப்பியாயினியை அழைத்து அவளிடம் தனது கருத்துக்களைக் கூறித் தன் முன்னிலையில் அவற்றை அவனிடம் விசாரித்து விடை கேட்கவேண்டும் என்று கூறினாள் பதுமை. ‘தானே நேருக்கு நேர் அவனைக் கேட்பது அவ்வளவு பொருத்தமாக இராது. மேலும் அவன் மனத்தில் தன்னை ஐயமுறக் காரணமாகும்’ என்றெண்ணியே யாப்பியாயினியைப் பதுமை தானும் அறிய வசதியாக, தன் முன்னிலையிலேயே அவனிடம் பேச்சுக் கொடுத்து அவற்றை அறியுமாறு கேட்டுக் கொண்டாள். தோழியும் அதற்கு ஒப்புக் கொண்டாள். அப்படியே செய்யவும் முற்பட்டாள்.

உதயணன் மாடப் பேரறைக்குள் வந்து அமர்ந்ததும், யாப்பியாயினிக்குப் பதுமை கண்களால் ஏதோ குறிப்புக்