பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அடைந்தான். அதன் வரலாற்றைக் கேட்ட யாவரும் வியப்புற்றுத் தருமோபதேசத்தின் பெருமையைப் பாராட்டினர்.

அப்பால் அரசனுக்கு வைராக்கிய முண்டாக, அவன் நரவாண தத்தனை வருவித்து, “நீ இந்த அரசாட்சியை ஒப்புக் கொள்; ஆட்சியைத் துறந்து தவஞ்செய்வதற்கு என் மனம் விரைகின்றது” என்று சொல்ல, அவன் தன் தந்தையை வணங்கி, “அடியேனுக்கும் அரசாட்சியிற் சிறிதும் விருப்பமில்லை; துறத்தற்கே என் மனமும் விழைகின்றது” என்று தன்னுடைய கருத்தைத் தெரிவித்தான். பின்பு உதயணன் பதுமையின் புதல்வனாகிய கோமுகனை அழைத்து அவனுக்கு முடிசூட்டிவிட்டுச் சென்று தேவியருக்குத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்களும் அவனுடன் வந்து தவஞ் செய்வதாகக் கூறினர்.

யூகி முதலிய மந்திரிமார்கள் யாவரும் வாசவதத்தை முதலிய தேவிமாரும் பிறரும் புடை சூழ்ந்து தன்னுடன் வர, உதயணன் தவ வனம் சென்று அங்கே தவம் செய்து கொண்டிருந்த தருமச்சுருதி என்னும் முனிவரைச் சரணமடைந்து துதித்து, “அடிகேள்! தவவழிகளை உபதேசித்து அடியேங்களை உய்வித்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அவர் சில தருமங்களை அவனுக்கும் மற்றவர்களுக்கும் விரிவாக உபதேசித்தார். உபதேசித்த பின்பு அவன் அப்பொழுது செய்யவேண்டிய நியமங்களை முடித்துக்கொண்டு தியானாதிகளைச் செய்வானாயினன். பின்பு உதயண முனிவன், நீண்டகாலம் யோக சமாதியைச் செய்து முடித்துச் சித்தபதத்தை அடைந்தான். தேவியரும் மந்திரிகளும் தவம் செய்து கற்பலோகத்தை அடைந்து நெடுங்காலம் இன்புற்று வாழ்ந்தார்கள். உதயணன் ஒரு காலத்தில் அரசனாக இருந்து செய்த இணையற்ற வெற்றி முழக்கங்களை இப்போது அவனுடைய இளைய மகனாகிய கோமுகன் செய்து, தன் புகழ் திக்கெலாம் பரவும்படி பெருமைகளைப் பெற்றுக் கொண்டிருந்தான்.