சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் பி. கோவிந்தராஜுலு அவர்கள் வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற ஆசிரியர் நாளில் ஆற்றிய உரை (31-3-93)
நமது பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களே, நமது பெருமைக்கு உரிய கல்வித்துறைச் செயலர் அவர்களே, தமிழ்த் தந்தை திரு அ.மு. பரமசிவானந்தம் அவர்களே, முதல்வர்களே, ஆசிரியப் பெருமக்களே, சான்றோர்களே, தாய்மார்களே, நல்ல மாணவ மணிகளே, அனவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்.
இந்த ஆசிரியர் திருநாளில் என்னை வரவழைத்து உரை ஆற்றுமாறு வாய்ப்பளித்தமைக்கு நன்றி செலுத்துவதற்கு உரிய கடமைப்பட்டுள்ளேன்.
திரு. அ.மு.ப. அவர்கள் 50 ஆண்டுகள் கல்வித் தொண்டாற்றி இணையற்ற ஒரு செயலைச் செய்து வரும் தமிழ்ச் சான்றோர் என்று கூறினால் மிகையாகாது. அவர் பலவற்றைத் தன் கனவாக வைத்துக் கொண்டு அது நனவாகும் போது எண்ணி மகிழ்ந்து தன் தாயின் வாயிலாக உணர்ந்து, அந்தத் தாய்க்கு மதிப்பு செய்யும் வகையில் ஒரு சிறு தொடக்கப்பள்ளியாக ஆரம்பித்து; அதை ஓர் உயர் நிலைப்பள்ளியாகவும் மற்றும் பெரிய கடல் அலை போல கல்லூரியாகவும் உருவாக்கி உள்ளார் எனில் அது மிகப்பெரிய சாதனையாகும், அதுவும். பெண்களுக்கு எனக் கல்லூரியை ஏற்படுத்தியுள்ளமையைக் காணும்போது, பெண்ணிற்குக் கல்வி எவ்வளவு அவசியம் என்று தெரிகிறது.
இப்பேரறிஞர் அவர்கள் “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதை மனத்தில் கொண்டு தமிழ் அறிஞர்களால் பாடப்பட்ட நூல்கள், அவர்கள் கொள்கையளவில் தெரிந்து கொண்ட நற்பயன்கள், ஏடுகளின் வாயிலாக அறிந்த