பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மருங்கிலே பிறந்து, பொன்னியின் மடியிலே தவழ்ந்து. காவிரிக் கரையிலே நடந்து, பொருநைத் துறையிலே கொலுவீற்றிருக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் இனிவர இருக்கும் இரண்டு புத்தகங்களும் காவிரிக் கரையிலே - பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளோடு வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படுகிற வரலாறு. விளக்கப்படுகிற கலைவிமர்சனம் எல்லாவற்றையும் பாராட்டுகிறவர்கள் பலர், இக்கட்டுரைகள் மூலம் எடுத்துக்கூறும் இலக்கிய வளத்தையும், பக்தி அனுபவத்தையும் அனுபவிப்பவர்களும் அநேகர். என்றாலும் சிலகுறைபாடுகளையும் காணுகின்றார்கள் ஒரு சிலர். அவற்றில் முக்கியமானது, ‘நாம் பக்தியோடு வணங்கும் தெய்வங்களை நையாண்டிக்கு உரிய பொருளாக்கி, அவர்களைக் கேலி பண்ணிப் பேசுவது பொருத்தமன்று. நகைச்சுவை வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் எழுதுவது தவறு என்பதுதான்.

இந்தக் குற்றச் சாட்டிற்கு நானே பதில் சொல்லவேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தை எனக்கு கொடுக்க விரும்பவில்லை இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கும் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர்கள். அவர்களிடமும் பலர் இப்படிக் குறைப்பட்டிருக்கிறார்கள் போலும். அது காரணமாக அவர்களே அந்த பக்தர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் அவர்களது முகவுரையிலே. அந்த 'ரஸிக' நண்பர்களது மனம் கோணாதபடி இவ்வளவு அழகாக என்னால் பதில் சொல்ல முடிந்திருக்காது என்பது எனக்கு இப்பொழுது தான் விளங்குகிறது. இந்தத் திருத்தொண்டைச்செய்ததற்காகவும் நல்ல முகவுரை ஒன்றையும் வழங்கியதற்காகவும் பேராசிரியருக்கு, 'செந்தமிழ்ச் செம்மலுக்கு' என் இதயம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'இத்தொடர் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் என்ன?' என்று எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் கேட்கிறார்.