பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

விவரம் கேட்டால், அவர் தம் உள்ளத்திலே கோயில் கட்டிய! கதையையும் அதில் பிரதிஷ்டை நடந்த விதத்தையும் விரிவாகவே கூறுகிறார்.

அரசன் பூசலார் அடியில் வீழ்ந்து, 'அன்பரே! இறைவன் நான் பொன்னாலும் மண்ணாலும் கட்டிய கலைக் கோயிலை விட, உம்முடைய மனக் கோயிலே பெரிது என்று உவந்து, உம் கோயில் பிரதிஷ்டைக்கே வந்திருக்கிறார்,' என்று கூறுகிறான். பூசலாரும் இறைவனது பேரன்பை வியக்கிறார். நினைந்து நினைந்து இறைவனைத் தொழுகிறார். இவரையே -

நீண்ட செஞ்சடையினார்க்கு
        நினைப்பினால் கோயிலாக்கிப்
பூண்ட அன்பு இடை அறாத
        பூசலார் பொற்றாள் போற்றி!

என்று சேக்கிழாரும் மகிழ்ந்து பாடுகிறார். 'மாசிலாப் பூசலார் மனத்தினால் முயன்ற கோயில்'கச்சியில் ராஜசிம்மன் அமைத்த கற்றளியிலும் சிறந்தது என்று இறைவன் கருதுகிறான் என்பது கதை.

சில வருஷங்களுக்கு முன்பு, மேல் நாட்டு அறிஞர் பலர் கூடிச் சமய உண்மைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர், ஒரு கூட்டத்தில். அந்தக் கூட்டத்துக்குச் சென்ற நானும் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன், வாயே திறவாமல்.

அங்கிருந்த மேல் நாட்டு அன்பர் ஒருவர் என்னையும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார். அந்தச் சமயத்தில் எனக்கு நினைவு வந்த இந்த ‘நின்றவூர்ப் பூசல் அன்பன் நினைவினால் அமைத்த கோயிலைப் பற்றிய கதையைக் கொஞ்சம் கண் மூக்கு எல்லாம் வைத்துச் சொன்னேன்.