பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

மதன் எனும் பாறை தாக்கி
மறியும் போது அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே!

என்று. ஆம். இறை உணர்வு மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறார் அவர். ஆனால் அந்த உணர்வைப் பெறுவதற்கும் அவன் அருளையே நாடுகிறார்.

இறைவனை உன்னுதற்கு அப்பர் அவன் அருள் வேண்டி நின்றால், இறைவனையே உண்டு சுவைத்து ருசிகண்டவராக நிற்கிறார் பட்டினத்தடிகள். திருவெண்காட்டிலே செல்வச் சீமானாகப் பிறந்து வளர்ந்து இறைவனாம் மருதவாணனையே மகனாகப் பெற்று, அம்மகன் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என்று உணர்த்த, அதனால் மாடு மனை மக்கள் சுற்றம் எல்லாம் துறந்து பல இடங்களில் அலைந்து கடைசியில் ஒற்றியூர்க் கடற்கரை வந்து சேருகிறார்.

அங்கு முளைத்திருந்த பேய்க்கரும்பும் இனிப்பதை உணர்கிறார். கானும் பொருளில் எல்லாம் இறைவனைக் காணும் பேறு பெற்ற அவர் அந்தக் கரும்பிலும் இறைவனையே காணுகிறார். கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியனாக இருப்பவன் இடைமருதன் என்பதை விடக் கரும்பையே கடவுளாகக் காணவும், அந்தக் கரும்பையே சுவைக்கவும் பேறு பெறுகிறார். தாம் பெற்ற அனுபவத்தையே எடுத்துச் சொல்கிறார்.

கண்டம் கரியதாய் கண்மூன்று உடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய் - தொண்டர் உடல்உருகித் தித்திக்கும் ஓங்கும் புகழ்ஒற்றிக்
கடல்அருகே நிற்கும் கரும்பு

வே-கு: 11