பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. சேயாற்றில் வென்றான்

பல்லவ மன்னர்கள் இலக்கியப் பெருமை பெற்றவர்கள். நந்திவர்மன் தொண்டை மண்டலத்தை ஆண்டவன் ஆனதினால், நந்தியம் பெருமாள் தொண்டைமான் என்ற பெயரும் பெறுகிறான். இவனைப்பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஒரு கலம்பகம் எழுதியிருக்கிறான், ஒரு புலவன். கலம்பகம் பாடிய புலவன் நந்திவர்மன் தம்பியே என்றும், இருவருக்கும் இருந்த பகை காரணமாகக் கலம்பகத்தில் அறம் வைத்துப் பாடினான் என்றும், கலம்பகப் பாடல்களைக் கேட்டால் உயிர் துறக்க நேரிடும் என்று கவிஞனே எச்சரித்தபோதும், தமிழ்க் கவிதையில் உள்ள ஆர்வத்தால், கலம்பகப் பாடல்களைப் பாடக் கேட்டு, கடைசியில் சிதையில் ஏறி உயிர் நீத்தான் அவன் என்றும், கர்ண பரம்பரை கூறும். பிற்காலப் பாடல் சிலவும் வலியுறுத்தும் இதை.

கலம்பகப் பாடல்கள் படித்தால், அப்படியே உயிர் கொடுத்துக் கேட்கக் கூடிய பாடல்களே என்று தோன்றும் (கதையில் உண்மை ஒரு சிறிதும் இல்லாவிட்டாலும் கூட). கலம்பகத்தின் மூலம் அவனது வெற்றிப் பிரதாபங்களை யெல்லாம் அறிகிறோம், நாம். பாண்டியர், சோழர், சாளுக்கியர்களை, நென்மலி, மண்ணைக்குடி, கருவூர் என்ற இடங்களில் நடந்த போர்களில் இவனே வெற்றி பெற்றிருந்தும், கலம்பகத்தில் இவன் தெள்ளாற்றில் பகைவர்களை வெற்றி கண்டதையே பிரதானமாகக் கூறியிருக்கிறது. 'தெள்ளாறை நந்தி 'தெள்ளாற்றில் வென்றான்' என்ற விருதுப் பெயர் நிலைத்து நின்றிருக்கிறது. இவனது கல்வியறிவு, வள்ளன்மை, போரில் வெல்லுந் திறத்தையெல்லாம் கலம்பகம் பாடிய கவிஞன் மட்டுமல்ல, பாரதம் பாடிய பெருந்தேவனாரும் பாராட்டியிருக்கிறார், ஓர் அழகான பாட்டில்.