பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வேங்கடம் முதல் குமரி வரை

ஐராவதேசுவரர் பாடல் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்லர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களுக்கோ தலங்களில் அக்கறை இல்லை. அவர்கள் அக்கறை எல்லாம் அரசர்களிடத்தே. அதனால் அவர் பாடல் பெறாமலே நின்று விட்டார். ஆனால் அவரை உருவாக்கிய ராஜராஜன் பாடல் பெற்றவன், அதுவும் அவனது தந்தையின் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தராலேயே. ராஜராஜன் உலாவிற்கு கண்ணிக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசு கொடுத்திருக்கிறான் அரசன். இதுதவிர, இவனுக்கும் இவனது மனைவிக்கும் நேர்ந்த பிணக்கைத் தீர்க்கவும் பாடியிருக்கிறார் அவர். இதைப்பற்றி ஒரு ரஸமான வரலாறு. இரண்டு நல்ல பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அரசி அரசனோடு ஊடி அக்கோபத்தில் தன் அந்தப்புர வாயிலை அடைத்துக் கொள்கிறாள். அரசன் போய்க் கதவைத் தட்டினால் திறக்கிற வழியாகக் காணோம். அவைப் புலவர் ஒட்டக்கூத்தர் போகிறார்.

நானே இனி உனை வேண்டுவதில்லை
நளின மலர்த்
தேனே! கபாடம் திறந்திடுவாய்;
திறவா விடிலோ
வான் ஏறு அனைய இரவி
குலாதியன் வாயில் வந்தால்
தானே திறக்கும் நின் கைத்
தலம் ஆகிய தாமரையே.

என்று பாடுகிறார். தேவியோ இன்னும் கொஞ்சம் கோபமுற்று, “ஆ! அப்படியா சங்கதி? நானா திறப்பேன்! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்” என்று மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொள்கிறாள். அரசியுடன் வந்த சீதனக் கவிஞனான புகழேந்தி வருகிறார் பின்னால்,