பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. மதுரை மீனாக்ஷி

சென்னை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கு ஆறு பேரை அனுப்புவதென்று தீர்மானம் ஆயிற்று. எதற்கென்று தெரியுமா? இப்போது எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அவர்கள் அங்குள்ள விஷயங்களைக் கற்று நிபுணத்துவம் அடைய நினைக்கிறார்களே, அதுபோல் ஆறுபேர் நகர நிர்மாணம் எப்படி என்று ஆராய, அப்படி அவர்கள் படித்து வந்ததைக் கொண்டு நம் நாட்டில் நகரங்களை அமைக்க அந்த அறிவு உதவும் என்று கருதினார்கள். இதற்காக ஆறு பேர்களைத் தேர்ந்தெடுக்க ஆறு வருஷங்கள் ஆயின. எவ்வளவோ போட்டி யார் யாரெல்லாமோ சிபாரிசு, இவ்வளவும் நடந்து ஆறு பேரைத் தேர்ந்தெடுத்துத் தீர்ந்தது. பேப்பரில் முடிவான உத்தரவு போடவேண்டியவர் முதல் மந்திரி, ஆகவே கடைசியில் "பைல்" அவரிடமும் போயிற்று. அவர் "பைலைப் படித்துப் பார்த்தார். நடந்திருக்கும் விஷயங்களைக் கவனித்தார் கடைசியில் குறிப்பு எழுதினார்.

அவர் எழுதிய குறிப்பு இதுதான்; `தமிழ் நாட்டில் நகர நிர்மானம் எப்படி இருக்க வேணும் என்று படிக்க அமெரிக்க போய்த்தான் தெரிய வேணுமா? இந்த ஆறு பேரும் நேரே மதுரைக்குச் செல்லட்டும். அங்கு நகரம் அமைந்திருக்கும் முறையைக் காணட்டும். நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.' ஆறு பேரும் ஏமாந்தார்கள். அவர்களை அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றவர்களும் ஏமாந்தார்கள் உண்மைதானே? நகர நிர்மாணம், அதிலும் தமிழ் நாட்டின் நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? மதுரைக்குச் சென்றால் தெரிந்து கொள்ள முடியாதா? நல்ல நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டாக அல்லவா மதுரை நகரம் அமைந்திருக்கிறது.