'உலகங்கள் எல்லாவற்றையும் இறைவன் உண்டாக்குகிறான் கொஞ்ச காலம் நிலைபெறச் செய்கிறான்; பின்னர் அவைகளை அழிக்கிறான்; இது அவனுக்கு விளையாட்டு. இந்த விளையாட்டானது காலத்தால் ஒரு தொடர்ச்சியாகவும், இடத்தினால் எங்கும் வியாபித்ததாயும் நடக்கிறது. நம்முடைய செயல் ஒவ்வொன்றும் அந்த விளையாட்டுக்கள் அடங்கியுள்ளளதுதான். அவனே நமக்குத் தலைவன். நமக்குப் புகலிடமும் அவனுடைய சரணங்களே' என்று விளக்கமாகக் கம்பன் ராமாவதாரம் என்னும் பார காவியம் எழுதத் தொடங்கும் முன்னர் பரம்பொருள் வணக்கம் செய்கிறான்.
உலகம் யாவையும்
தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும்
நீக்கலும் நீங்கலா
அலகிலா விளை
யாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களே.
என்பது அவனது பாட்டு. இதிலிருந்து உலகுக்கு எல்லாம் ஒருவனே இறைவன் என்பதை அறிகிறோம். அவனையே சிருஷ்டித் தொழில் செய்யும் போது பிரமன் என்கிறோம். காத்தல் தொழில் செய்யும்பொழுது விஷ்ணு என்கிறோம்; அழித்தல் செய்யும்பொழுது சிவன் என்கிறோம். இவர்களில் சிவன் விஷ்ணுவாக மாறுவதையும், விஷ்ணு சிவனாக மாறுவதையும் இருவரும் இணைந்து ஒரே கோலத்தில் இருப்பதையும் சில தலங்களில் முன்பே