பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

133

அதற்கு பின் ஆறுமாதம் கழித்தே IAS பதவி வந்தது என்றாலும், அன்று மனதிலே ஒரு தெம்பு பிறந்தது. சாயிபாபா பக்தனாக நானும் மாறினேன். அதன் பின் ஒவ்வொரு குரு வாரமும், தவறினால் ஞாயிற்றுக் கிழமை அன்றும் நாக சாயி மந்திருக்குப்போய் வந்தேன். இன்னும் கஷ்டங்கள் நேர்ந்தால் சாயிபாபாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அக்கஷ்டங்கள் தீரவும் பெறுகிறேன்.

எனது உபாசனா மூர்த்தி பிள்ளையார்தான். தஞ்சைப் பெருஉடையாரிடத்திலே, தில்லைச் சிற்றம்பலவனிடத்திலே உள்ள பக்தியை விட திருவேங்கடவனிடத்திலே அழுத்தமான பக்தியும் நம்பிக்கையையுடையவன் தான் என்றாலும் அதே சமயத்தில் சாயிபாபா பக்தனாகவும் வாழ்கிறேன். இதில் எல்லாம் முரண்பாடு ஒன்றும் இல்லை.

ஏதோ மனதுள் பற்றுக் கோடு கொள்வதற்கு ஒரு மூர்த்தம் வேண்டும். அது சாயிபாபாவாக இருக்கிறது. எனக்கு இன்று. "நான் இருக்க பயமேன்“ என்ற தாரகமந்திரம் நம் காதுகளில் ஒலித்து உள்ளத்தில் நிறைந்து விட்டால், நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்று உறுதியே பிறந்து விடுகிறது அல்லவா? இப்படி ஒரு கடவுள் நம்பிக்கை வளர்வதற்கு துணை புரிவராக நாகசாயிமந்திர் பாபா என் வாழ்வில் புகுந்திருக்கிறார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.