பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

அத்தனும் வேறு வழியில்லாமல் கனியை அந்த மூத்த பிள்ளையிடமே கொடுத்து விடுகிறார். ஆனால் ஓடி ஆடி அண்டங்களை எல்லாம் சுற்றி வந்து முருகன் ஏமாந்து போகிறார். அதனாலேயே கோபித்துக் கொண்டு ஆண்டி வேடத்தில் போய் விடுகிறார். சரி இந்த முருகன் சென்று நிற்கிற இடம் பழநி என்பதை அறிவோம். அன்று வெற்றி பெற்ற விநாயகர் எங்கிருக்கிறார் என்று கேட்கத் தோன்றுமல்லவா. இதற்கு தமிழ் நாட்டில் உள்ள தல வரலாறுகள் எல்லாம் உதவி செய்யவில்லை.

கொம்பனைய வன்னி
கொழுநன் குறுகமே
வம்புனைய மாங்கனியை
நாறையூர் - நம்பனையே
தன்னை வலம் செய்து கொளும்
தாழ் தடக்கையான்

என்று நம்பியாண்டார் நம்பி பாடுவதால் இக்கதை நித்யத்வம் பெற்று விடுகிறது. இப்படி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நான் அந்தத் திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றேன். அங்கு வலம் வந்த விநாயகரைக் கண்டேன். அங்குள்ள மக்கள், அன்று இறைவனை வலம் வந்த விநாயகர் அங்கு தங்கியிருப்பதால்தானே, அத்தலத்திற்கே திருவலம் என்று பெயர் வந்திருக்கிறது என்று கூறுவதையும் கேட்டேன்.