பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. எண்ணாயிரம்

நாம் வசிக்கும் இந்த மண்ணிற்குத்தான், இந்த பூமிக்குத்தான் எத்தனை சக்தி! கரடு முரடாய்ப் பரந்து கிடக்கும். ஓர் இடத்தைக் கொஞ்சம் கீறி அதனுள்ளே சில விதைகளைப் போட்டு விடுகிறோம். அன்று கொஞ்சம் மழையும் பெய்கிறது. இரண்டு மூன்று தினங்களில் அந்த - இடத்திலிருந்து எத்தனை எத்தனை அபூர்வமான சிருஷ்டிகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன! உண்ண உணவளிக்கும் கதிரை நீட்டிக் கொண்டு நெற்பயிர் வந்து விடுகிறது. உடுக்க உடையுதவும் பஞ்சைக் சிதறிக் கொண்டு பருத்திச் செடி வளர்கிறது, 'காய்க்கிறது, வெடிக்கிறது.

இன்னும் வித விதமான வர்ண ஜாலங்களைக் காட்டிக் கொண்டு மலர்களும் புஷ்பிக்க ஆரம்பித்து விடுகின்றன. நறு மணத்தை அள்ளியே வீசுகின்றன. அத்தனை அபூர்வ பொருள்களையும் தன்னுள்ளே தானே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலே தான் இந்த மண்ணை, இந்த பூமியைப் பூமா தேவி என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றார்கள். வந்தித்து வணங்கியும் இருக்கிறார்கள்.

சீதையின் அவதார தத்துவத்தை விளக்க விரும்பிய கம்பன் கூட இந்த உண்மையை நன்றாக உணர்ந்திருக்கிறான். பூமா தேவி என்னும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்களுக்கு. அருள் வடிவமாய்த் தரிசனம் கொடுக்கிறாள். அவளது அழகான மேனியிலிருந்து நெற்கதிராகிய பச்சைப் பசுங்கதிர்கள் வெளிவந்து பிரகாசிக்கின்றன.