பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

95

அவர் கையிலே பாம்பொன்று ஏந்தி, பெருமாள் எழுந்தருளுவதற்கு ஏற்ற முறையில் கால் மடித்து சிறகை விரித்து நிற்கிறார். இன்னும் இத்தலத்தில் ஆழ்வார்கள் பலரும், உடையவரும், சேனைமுதலியார் என்னும் விஸ்வக்சேனரும் மற்றக் குறடுகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். இன்னும் மணவாள மாமுனிகள் சந்நிதியும் தனியே இருக்கிறது.

இங்குள்ள மாயக் கூத்தருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி ரஸமான வரலாறு ஒன்று உண்டு. ஆழ்வார் திருநகரியில் நாயக்கர் மண்டபம் கட்டி முடிந்த காலத்தில் வைகாசி உத்சவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த உத்சவத்திற்கு நவதிருப்பதிப் பெருமாள்களும் எழுந்தருளுவது வழக்கம். பல வருஷங்களுக்கு முன் இந்த உத்சவத்தைக் காண சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அவர்கள் தாம் நமது முன்னாள் அறநிலைய அமைச்சர் திரு வேங்கடசாமி நாயுடு அவர்களின் முன்னோர். அக்குடும்பத்தலைவர் மற்றொருவருக்கும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளேயே ஒரு பிரார்த்தனை செய்து கொண்டார். நவதிருப்பதிப் பெருமாள்களில் ஆதி நாதரைத் தவிர மற்றவர்களில் எவர் முதல் முதல் நாயக்கர் மண்டபத்திற்கு வந்து சேர்கிறாரோ, அவருக்குத் தங்கக்கவசம் செய்து சாத்துவது என்று பிரார்த்தனை. அன்று முதல் முதல் எழுந்தருளியவர் மாயக் கூத்தர். அதனால் அவர் பிரார்த்தனைப்படி தங்கக் கவசம் செய்து அணிவித்திருக்கிறார்.

ஆம். பெரியவர் பெருமான்களிடையே ஓர் ஓட்டப் போட்டியையே வைத்திருக்கிறார். அந்தப் போட்டிப் பந்தயத்தில் முன்னோடி வந்து ஜெயித்தவர் மாயக் கூத்தராக இருந்திருக்கிறார். மாயக் கூத்தர் சோர நாட்டியம் மட்டும் ஆடவல்லவர் அல்ல. நன்கு ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி பெறக் கூடியவர் என்பதை அறிகிறோம்.