பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வேங்கடம் முதல் குமரி வரை

இக்கோயிலில் கல்வெட்டுகள் இல்லை என்றாலும், ஆழ்வார் திருநகரியில் எடுத்த கல்வெட்டுக்களில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது அக்கல்வெட்டுகள் மூலம், பெருங்குளத்தில் சில நிலங்கள் ஆழ்வார் திருநகரித் திருவிழாச் செலவினுக்கு நன்கொடையாக அளிக்கப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. இக்கல்வெட்டுகளில், இவ்வூர், உத்தம பாண்டிய நல்லூர் என்ற பெருங்குளம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்கோயிலுக்குப் கீழ்புறம் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் வழுதீசர். இவர் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த உக்கிரப்பெருவழுதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது வரலாறு என்பதால் அவரது பழமையும் விளங்கும். இந்த வழுதீசர் கோயில் ஜீரணோத்தாரணப் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

மாயக்கூத்தர் கோயில் கோபுரம், கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய விமானம் எல்லாம் சிதைந்து இருக்கிறது. மண்டபங்களும் பழுதுற்ற நிலையிலே தான் இருக்கின்றன.

இவைகளையெல்லாம் புதுப்பிக்கும் பணியை உள்ளூர் அன்பரும் பிறரும் ஆரம்பித்திருக்கிறார்கள். மாய்க்கூத்தர் பெயர் தாங்கிய மாயக்கூத்தர் அய்யங்கார் என்பவரே முன்னின்று காரியங்களை நடத்துகிறார். மாயக் கூத்தரே முன்னின்று நடத்தும் திருப்பணியில் பங்கு கொள்வது பெரும்பேறு. அந்தப் பேற்றைத் தமிழன் பர்கள் பலரும் பெறட்டும் என்றே இதனையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.