பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்


நாடும் மக்களும்

"நாடென்ப நாடா வளத்தன ” - என்றார் பொய்யாமொழியார். மக்களெல்லாம் தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய வற்றை வேறெங்கும் நாடிப் போகாமல், தன்னகத்தேயே வளம் கொழுவியதாய் அமைந்த ஒரு நிலப்பரப்பே, நாடு எனப் பெயர் பெறுவதாகும். ஆனால் இத்தகைய இயற்கைவளம் பொதுளியதாய் அமைந்த ஒருநாடு இக்கால் உலகில் வேறெங்கும் இல்லையாயினும், நம் பண்டைத் தமிழகப் பகுதி அவ்வாறிருந்தது என ஒங்கிப் பேசலாம்.

"உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே"- எனக் கூறி மாரி வண்கைப் பாரியாண்ட பறம்பு மலை இயற்கை வளம் மிக்கதாய் இருந்தது என்றார் கபிலர். ஆயினும் அத்தகைய வளங்கனிந்த நாட்டை நாம் காண்பதற்கரிதெனினும், அவ்வாறு வளம் மிக்கதாய் ஆக்கிக்கொள்ள வல்ல அறிவாற்றல் மிக்கோர் பலரும் உள்ளனர். அவ்வறிவாற்றலிற் சிறந்தோரை நாம் ஆளுநராகக் கொள்வோமாயின் நாமும் அவ்வளம் சான்ற நாட்டில் வதிந்து வாழ்வை நுகரலாகும்.

இனி இத்தகைய நாட்டை உண்டாக்க ஆளுநருமே அன்றி, மக்களும் உயர்ந்தோராய் இருத்தல் வேண்டும்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
புறம்

-என்றார் ஒளவை மூதாட்டியாரும். நாடாகட்டும், காடாகட்டும், பள்ளமாகட்டும், மேடாகட்டும், எங்கு மக்கள் நல்லவராக உள்ளனரோ, அந்த நிலமே நல்ல நாடு என்பது அவர் கருத்து.