பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

பான ஏடுகளின் செய்திகள், இவர்களுடன் வாழ்ந்தவர்களது கருத்துக்கள் ஆகிய யாவற்றையும் தொகுத்து வெளியிடலாம்.

எந்தத் துறையாக இருப்பினும் சான்றுகளையும் விவரங்களையும் தொகுப்பதே இன்று தனி ஆய்வு முறையாக வளர்ந்து வருகிறது. அடுத்த கட்டம், இந்தச் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்வதாகும். இப்பணிகளை ஒரு சில தனி மனிதர்களோ, ஆய்வாளர்களோ மட்டும் நிறைவேற்றிவிட முடியாது. பலருடைய கூட்டு முயற்சியும் உழைப்பும் இதற்கு அவசியமாகும். பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஒத்துழைத்தால் பணி விரைவும் நிறைவும் பெறும்.

‘மக்கள் வெளியீடு’ இப்பணியில் தனது இயன்ற பங்கினைச் செலுத்த முதல் முயற்சியாகக் கட்டபொம்மனைப் பற்றிய சில குறிப்புக்களைத் தொகுத்து வெளியிட்டது. அந்த மாவீரனைப் பற்றிய செய்திகள் இன்னும் எவ்வளவோ உண்டு. சென்னை ஆவணம், லண்டன் ஆவணம் ஆகியவற்றில் இருக்கும் பதிவேடுகளையும் தொகுத்துத்தரவேண்டும்.

வீரபாண்டியக் கட்டபொம்மன்—ஆய்வுத் தொகுப்பு என்ற நூலின் முதல் பதிப்பு இருப்பில் இல்லாததையடுத்து மேலும் பல புதிய செய்திகளுடன் கூடிய விரிவான பதிப்பு ஒன்றை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்று மற்றவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றுகளையும் மக்கள் வெளியீடு வெளியிட விழைகின்றது. இப்பணியில் அனைவருடைய–குறிப்பாக ஆய்வாளர்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

‘வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி’ என்ற இந்நூல் புதிய அலை என்ற ஏட்டில் 19-12-1976 முதல் 30-1-1977 வரை தொடராக வெளியிடப்பட்டதாகும். இது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல என்றாலும் வ. உ. சி. அவர்களது வாழ்க்கையின் சிறப்பை இந்நூலில் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றார்.

தமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட வாய்ப்பளித்து வரும் பேராசிரியர் அவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவினையொட்டி, அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பத்து நூல்களை அச்சிட ‘மக்கள் வெளியீடு’ ஏற்பாடு செய்துள்ளது. மார்க்சீய ஆய்வுப் பேரறிஞர் நா. வா. அவர்களின் பணி சிறக்க–மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு துறைகளில் வழிகாட்டுதல் பெறத் தமிழ் மக்களின் சார்பில் ‘மக்கள் வெளியீடு’ விழைகின்றது.

மே. து. ராசு குமார்