பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

௱௭௧


கைப்பட்டுக் கலங்கினும் என்பது—தலைவன் கையகப்பட்ட பின்பு என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு.

நாணுமிகவரினும் என்பது—தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு.

இட்டுப்பிரி விரங்கினும் என்பது—தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்கமுறினும் என்றவாறு.

அருமைசெய் தயர்ப்பினும் என்பது—தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனால் அவனும் வருதலைத்தவிரினும் என்றவாறு.

வருதலைத் தவிர்தலை அயர்ப்பு என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம்வரினும் என்றுமாம். செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க.

வந்தவழி யெள்ளினும் என்பது—தலைவன் வந்தவிடத்து அலராகுமென்றஞ்சியிகழ்ந்த வழியும் என்றவாறு.

விட்டுயிர்த்தழுங்கினும் என்பது—மறையாது சொல்லியிரங்கினும் என்றவாறு.

நொந்து தெளிவொழிப்பினும் என்பது—தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து, [அ]தனை யொழிப்பினும் என்றவாறு.

அச்ச நீடினும் என்பது—தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு.

பிரிந்தவழிக் கலங்கினும் என்பது—தலைவன் பிரிந்தவழிக் கலக்கமுறினும் என்றவாறு.

அது தாளாணெதிரும் பிரிவு.

பெற்றவழி மலியினும் என்பது—தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு.

வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது—தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டுவருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு.

கூறிய - காலையும் என்பது—தோழி இவ்வாறு கூறியதனை மனங்கொள்ளாத காலத்தினும் என்றவாறு.

மனைப்பட்டு - அருமறை யுயிர்த்தலும் என்பது—புறத்து விளையாடுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு.

எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம் என்பது போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று.

‘கைப்பட்டுக் கலங்கல்’ முதலாகக் ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ யீறாகச் சொல்லப்பட்ட பன்னிருவகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும். அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே யுரைக்கப்பெறுவது. ஆண்டும் இதற்கு என் செய்வாம் என உசாவுதலோடு கூடத் தனது காதன்மை தோன்றவுரைக்கும் என்றவாறு; மனைப்படாக்கால் அவனைக் காண்டலால் உரைக்கவேண்டுவதில்லை யென்றவாறாயிற்று. இப்பன்னிரண்டும் ஒருத்திமாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு.