பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


31ஆ. குறித்தசில சட்டங்களையும் ஒழுங்குறுத்தும் விதிகளையும் செல்லுந்தன்மை உடையனவாக்குதல் :

31அ உறுப்பில் அடங்கியுள்ள வகையங்களின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி, ஒன்பதாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குறுத்தும்விதிகள் இவற்றில் எதுவும் அல்லது இவற்றின் வகையங்களில் எதுவும், அத்தகைய சட்டம், ஒழுங்குறுத்தும்விதி அல்லது வகையம், இந்தப் பகுதியின் வகையங்கள் எவற்றிற்கும் முரணாக இருக்கிறது என்றோ அந்த வகையங்கள் வழங்கும் உரிமைகளில் எதனையும் பறிக்கிறது அல்லது ஒடுக்குகிறது என்றோ காரணங்காட்டி, அது இல்லாநிலையதாகிவிடுவதாக அல்லது எப்போதேனும் இல்லாநிலையதாகிவிட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது; மேலும், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றன் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் இதற்கு மாறாக இருந்தபோதிலும், மேற்சொன்ன சட்டங்கள், ஒழுங்குறுத்தும்விதிகள் ஒவ்வொன்றும், அதனை நீக்கறவு செய்வதற்கு அல்லது அதில் திருத்தம் செய்வதற்குத் தகுதிறமுள்ள சட்டமன்றம் ஒன்றன் அதிகாரத்திற்கு உட்பட்டு, தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்.

31இ. குறித்தசில நெறிப்படுத்தும் கோட்பாடுகளைச் செல்திறப்படுத்தும் சட்டங்களுக்குக் காப்புரை :

13ஆம் உறுப்பில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், IVஆம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் எய்துறச்செய்யும் அரசின் கொள்கையைச் செல்திறப்படுத்துகிற சட்டம் எதுவும், அது 14ஆம் உறுப்பினால் அல்லது 19ஆம் உறுப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் எதற்கும் முரணாக இருக்கிறது அல்லது அந்த உரிமையைப் பறிக்கிறது அல்லது ஒடுக்குகிறது என்னும் காரணங்காட்டி இல்லாநிலையதாகிவிடுவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது; மேலும், அத்தகைய கொள்கையினைச் செல்திறப்படுத்துவதற்காகவே அச்சட்டம் உள்ளது என்னும் ஒரு விளம்புகையைக் கொண்ட சட்டம் எதுவும், அது அத்தகைய கொள்கையைச் செல்திறப்படுத்தவில்லை என்னும் காரணங்காட்டி நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது:

வரம்புரையாக: அத்தகைய சட்டம் ஒரு மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்படுமிடத்து, அது குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, அவருடைய ஏற்பிசைவையும் பெற்றிருந்தாலன்றி, இந்த உறுப்பின் வகையங்கள் அச்சட்டத்திற்குப் பொருந்துறுவதில்லை.

[1][31ஈ. ★★]

அரசமைப்புத் தீர்வழிகளுக்கான உரிமை

32. இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கான தீர்வழிகள் :

(1) இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்காக, உரிய நடவடிக்கைகள் மூலம் உரிமைக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகிக்கோரும் உத்தரவாதமளிக்கப்படுகிறது.

(2) இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளில் எதனையும் செயலுறுத்துவதற்காக, பணிப்புரைகள் அல்லது ஆணைகள் அல்லது ஆட்கொணர்விப்பு, செயலுறுத்து, தடையுறுத்து, தகுதிவினவு, நெறிமுறைக்கேட்பு ஆகியவற்றின் தன்மை கொண்ட நீதிப்பேராணைகளில் பொருத்தமான நீதிப் பேராணைகள் இவற்றைப் பிறப்பிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் உடையது ஆகும்.

(3). (1), (2) ஆகிய கூறுகள் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும் அதிகாரங்களுக்குக் குந்தகமின்றி, (2)ஆம் கூறின்படி உச்ச நீதிமன்றம் செலுத்துவதாகும் அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும், பிற நீதிமன்றம் எதுவும் அதற்குரிய அதிகாரவரம்பு எல்லைக்களுக்குள் செலுத்திவருவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் அதிகாரம் அளிக்கலாம்.


  1. 1977ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் (13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு நீக்கறவு செய்யப்பட்டது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/39&oldid=1469171" இலிருந்து மீள்விக்கப்பட்டது