பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


39. அரசு பின்பற்ற வேண்டிய குறித்தசில கொள்கைக் கோட்பாடுகள் :

குறிப்பாக, பின்வருவனவற்றை எய்திடுமாறு அரசு தன் கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும்

(அ) குடிமக்கள், ஆண்களும் பெண்களும் சரிநிகராக, வாழ்க்கைக்குப் போதுமான வழிவகைக்கு உரிமை உடையவராதல்;
(ஆ) பொதுமக்கள் நலன்களுக்கு நனிசிறக்க உதவும் வகையில், சமுதாயத்தின் பொருள்வளங்கள் மீதான சொத்துரிமையினையும் கட்டாள்கையினையும் பகிர்ந்தளித்தல்;
(இ)பொருளியல் முறைமையின் செயற்பாட்டினால், செல்வவளமும் உற்பத்திச் சாதனங்களும், பொது நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்துவிடாது இருத்தல்;
(ஈ) ஆண், பெண் இருபாலாரும் ஒத்த வேலைக்கு ஒத்த சம்பளம் பெறுதல்;
(உ) ஆண், பெண் உழைப்பாளர்களின் உடல்நலம், உடல்வலிவு, சிறார்களின் இளம்பருவம் இவற்றை நெறிதவறிப் பயன்படுத்தாமை; மேலும், பொருளியல் தேவையுறுத்தம் காரணமாகக் குடிமக்கள் தங்கள் வயதுக்கோ உடல் வலிவுக்கோ பொருந்தாத பிழைப்புப்பாடுகளில் ஈடுபடுமாறு இறுக்கப்படாமை;
(ஊ) நலஞ்சார் முறையிலும் சுதந்திரமும் கண்ணியமும் நிலவும் சூழ்நிலைகளிலும் வளர்ச்சியுறுவதற்கான வாய்ப்புநலன்களும் வளவசதிகளும் சிறார்கள் பெறுமாறு செய்தல்; மேலும், பிறர் நலனுக்காகக் குழந்தைப் பருவத்தினரும் இளமைப் பருவத்தினரும் கருவிகளாக்கப்படுவதினின்றும், ஒழுக்கமும் உயிர்வாழ் வசதியும் அற்றுப்போகுமாறு கைவிடப்படுவதினின்றும் பாதுகாத்தல்.

39அ. சமநீதியும் இலவசச் சட்ட உதவியும் :

சமவாய்ப்பின் அடிப்படையில் நீதி ஓங்குமாறு சட்டமுறையமைவு செயற்படுவதை அரசு உறுதிசெய்தல் வேண்டும்; மேலும், குறிப்பாக, குடிமகன் எவரும் நீதியைப் பெறுவதில் பொருளியல் அல்லது பிற ஏலாமைகள் காரணமாக அவருக்கு வாய்ப்பு நலன்கள் மறுக்கப்படாமலிருப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசு, தகுந்த சட்டமியற்றல் அல்லது செயல்திட்டங்கள் வழியாகவோ பிற வழியாகவோ இலவசச் சட்ட உதவி அளித்தல் வேண்டும்.

40. ஊராட்சி மன்றங்களை அமைத்தல் :

அரசு, ஊராட்சி மன்றங்களை அமைப்பதற்கும், தன்னாட்சி அமைப்புக் கூறுகளாக அவை இயங்குவதற்குத் தேவைப்படும் அதிகாரங்களையும் அதிகாரஅடைவையும் அவற்றுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

41. வேலை, கல்வி, குறித்தசில நேர்வுகளில் பொதுநல உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை :

அரசு, தன் பொருளியல் திறனுக்கும் வளர்ச்சிக்கும் அடங்கியவாறு, வேலைபெறுதல், கல்வி பெறுதல், மேலும், வேலையின்மை, முதுமை, பிணி, உடல் ஊனம் ஆகிய நேர்வுகளிலும், பிற தகாத வறுமைநேர்வுகளிலும் பொதுநல உதவி பெறுதல் இவற்றுக்கான உரிமையினை எய்திடுவதற்குப் பயனுறு ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

42. இசைவானதும் இதமானதுமான வேலைச் சூழல்களுக்கும், பேறுகால உதவிக்கும் ஏற்பாடு செய்தல் :

அரசு, இசைவானதும் இதமானதுமான வேலைச் சூழல்களை எய்திடவும் பேறுகால உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/42&oldid=1469176" இலிருந்து மீள்விக்கப்பட்டது