பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


43. தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி முதலியன : வேளாண்மை, விசைத்தொழில் அல்லது பிறவகைத் தொழிலாளர் அனைவரையும், வேலை, வாழ்வுக்கேற்ற கூலி, சீர்மையான வாழ்க்கைத்தரத்தையும் ஓய்வுநேரத்தை நிறைவுற நுகர்தலையும் உறுதியாக அளிக்கும் வேலைச்சூழல்கள், சமுதாய, பண்பாட்டு வாய்ப்பு நலன்கள் ஆகியவற்றை எய்திடச் செய்வதற்கு, தகுந்த சட்டமியற்றல் அல்லது பொருளியல் அமைப்பு வழியாகவோ, பிற வழியாகவோ அரசு முனைந்து முயலுதல் வேண்டும், குறிப்பாக, அரசு, ஊரகப் பகுதிகளில் தனிமனித அல்லது கூட்டுறவு அடிப்படையில் குடிசைத்தொழில்களை வளர்ப்பதற்கு முனைந்து முயலுதல்வேண்டும்.

43அ. விசைத்தொழில்களின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்றல் :

விசைத்தொழில் எதிலும் ஈடுபட்டுள்ள ஏற்பமைவுகள், நிறுவனங்கள், பிற அமைப்புகள் இவற்றின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்பதை எய்திடச் செய்வதற்கு தகுந்த பிற சட்டமியற்றல் வழியாகவோ வழியாகவோ அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச்சட்டம் :

குடிமக்கள் அனைவரும், இந்திய ஆட்சிநிலவரை எங்கணும், ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச்சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்.

[1][45. ஆறு வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு குழந்தைப்பருவ நிலையில் கவனிப்பும் கல்வியும் அளிக்க ஏற்பாடு செய்தல் :

சிறார்கள் அனைவருக்கும், அவர்களுக்கு ஆறு வயது முடியும்வரை, குழந்தைப்பருவ நிலையில் கவனிப்பும், கல்வியும் அளிக்க ஏற்பாடு செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்.]

46. பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல் :

பக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப்புணர்வுடன் வளர்த்தல் வேண்டும். மேலும், சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட சுரண்டல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தலும் வேண்டும்.

47. உணவுச்சத்தின் தரநிலை, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்தவும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் அரசிற்குற்ற கடமை :

மக்களின் உணவுச்சத்தின் தரநிலை, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்துவதும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதும் தன்னுடைய தலையாய கடமைகளுள் அமைவன என்பதை அரசு கருத்திற்கொள்ளுதல் வேண்டும்; மேலும், குறிப்பாக, போதைதரும் குடிவகைகளையும் உடல்நலனுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துப்பொருள்களையும் மருந்தாக அன்றி, உட்கொள்வதைத் தடை செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்.

48. வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின் அமைப்பு :

வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றைத் தற்கால அறிவியல் முறைகளில் அமைப்பதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்; மேலும், குறிப்பாக, பசுக்கள், கன்றுகள், பிற கறவை மற்றும் இழுவைக் கால்நடை இனங்களைப் பேணிக்காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவற்றை வன்கொலை செய்வதைத் தடைசெய்வதற்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுதல் வேண்டும்.


  1. 2002 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஆறாம் திருத்தம்)ச் சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/43&oldid=1469177" இலிருந்து மீள்விக்கப்பட்டது