பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


(உ) சமயம், மொழி மற்றும் வட்டார அல்லது வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து, இந்திய மக்கள் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும் பொது உடன்பிறப்புணர்வையும் பேணிவளர்த்தல்; மகளிர்தம் மாண்பிற்கு இழுக்காகும் பழக்கங்களை விட்டொழித்தல்;
(ஊ)நமது கலப்புருவான பண்பாட்டின் வளமார்ந்த மரபுச் செல்வத்தை மதித்துப் பாதுகாத்தல்;
(எ) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் இவை உள்ளிட்ட இயற்கைச் சூழலை அழியாது காத்து வளர்த்தல்; உயிரினங்கள்பால் இரக்கங்காட்டுதல்;
(ஏ)அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்;
(ஐ) பொதுச் சொத்தினைக் காப்பணைவுசெய்தல்; மேலும், வன்முறையினை முற்றாக ஒழித்தல்;
(ஒ) சலியாத முயற்சியிலும் சாதனையிலும் உயர்மிகு நிலைகளை நாடு இடையறாது மேன்மேலும் எய்தும் வகையில், தனிமனித மற்றும் கூட்டுச் செயலாண்மைத் துறைகள் அனைத்திலும் உயர்திறம் நோக்கி ஓயாது முயலுதல்;
[[1](ஒ) பெற்றோராக அல்லது காப்பாளராக இருக்கிற நிலையில், ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள தனது குழந்தைக்கு அல்லது நேர்விற்கேற்ப காப்பிலுள்ளவருக்குக் கல்விக்கான வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்தல்.]

பகுதி V

ஒன்றியம்

அத்தியாயம் I-ஆட்சித்துறை

குடியரசுத்தலைவரும் துணைத்தலைவரும்

52. இந்தியக் குடியரசுத்தலைவர் :

இந்தியக் குடியரசுத்தலைவர் என்று ஒருவர் இருப்பார்.

53. ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம் :

(1) ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம் குடியரசுத்தலைவரிடம் உற்றமைந்திருக்கும்; மேலும், அதை அவர் நேரடியாகவோ தமக்குக் கீழமைந்துள்ள பதவியாளர்கள் வழியாகவோ இந்த அரசமைப்புக்கு இணங்கச் செலுத்திவருவார்.

(2) மேலேகண்ட வகையத்தின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி, ஒன்றியத்துப் பாதுகாப்புப் படைகளின்மீதான உயர்தனி ஆணையதிகாரம் குடியரசுத்தலைவரிடம் உற்றமைந்திருக்கும்; மேலும், அதைச் செலுத்துவது சட்டத்தினால் ஒழுங்குறுத்தப்படும்.

(3) இந்த உறுப்பிலுள்ள எதுவும்

(அ) நிலவுறும் சட்டம் ஒன்றினால் மாநிலம் ஒன்றன் அரசாங்கத்திற்கோ பிறவகை அதிகார அமைப்பிற்கோ வழங்கப்பட்ட பதவிப்பணிகள் எவற்றையும் குடியரசுத்தலைவருக்கு மாற்றுவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது; அல்லது
(ஆ) நாடாளுமன்றம் சட்டத்தினால், குடியரசுத்தலைவர் அல்லாத பிறவகை அதிகார அமைப்புகளுக்குப் பதவிப்பணிகளை வழங்குவதற்குத் தடையூறு ஆவதில்லை.


  1. 2002ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஆறாம் திருத்தச்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/45&oldid=1469179" இலிருந்து மீள்விக்கப்பட்டது