பஞ்ச தந்திரக் கதைகள்/பொரிமாக் குடத்திலே இழந்த போகம்

விக்கிமூலம் இலிருந்து

2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்

ஒரு நகரத்தில் ஒரு பார்ப்பன இளைஞன் இருந்தான் அவன் தாய் தந்தையற்றவனாகையால் ஏழையாக இருந்தான். தரித்திரனான அவனுக்கு யாரும பெண் கட்டிக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு நாள் ஒரு சிரார்த்தத்திற்குப் போயிருந்தான். அரைத்த பொரிமாக் குடம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. பருப்பும் சோறும் நன்றாகச் சாப்பிட்டு விட்டுச் சிரார்த்தப் பொருள்களை எடுத்துக் கொண்டு மற்றோர் ஊருக்குப் புறப்பட்டான். வயிறு நிறையச் சாப்பிட்டிருந்ததால் ஒரே மயக்கமாக இருந்தது. ஆகையால் வழியில் ஒரு நிழலில் களைப்பாறத் தங்கினான். மணல் தரையில் சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது அவன் மனத்தில் கோடி வகையான எண்ணங்கள் உண்டாயின.

இந்தக் குடத்திலிருக்கும் மாவை விற்றால் ஓர் ஆடு வாங்கலாம். அந்த ஆட்டை மேய்த்து வளர்த்தால் அது இரண்டு குட்டிகள் போடும். அந்த இரண்டில் ஒன்றைப் பொலி கடாவாக வளர்த்து அதை விற்றால் இரண்டு பெண் ஆடுகள் வாங்கலாம். கையில் இருக்கும் நாலு ஆடுகளும் இரண்டிரண்டு குட்டி போட்டால் மொத்தம் பன்னிரண்டு ஆடுகள் சேர்ந்து விடும். இந்தப் பன்னிரண்டு ஆடுகளையும் விற்று இரண்டு பசுக்கள் விலைக்கு வாங்குவோம். அவை ஊரிலே மேய்ந்து கொழுத்து இரண்டு கன்றுகளை ஈனும். அவை நான்கிலும் கிடைக்கும் பாலையும், நெய்யையும், விற்று மேற்கொண்டு இரண்டு பசு வாங்குவோம். ஆறு பசுக்களும் ஆறு காளங்கன்றுகளை ஈனும் . அந்த மூன்று சோடிகளையும் ஏரில் பூட்டி இருக்கிற நிலங்களை யெல்லாம் உழுது பயிரிடுவோம. விளைந்து வரும் தானியத்தை மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்று விரைவில் பணம் சேர்த்து விடுவோம்.


அந்தப் பணத்தைக் கொண்டு அரசனிடம் அனுமதி வாங்கி ஒரு பெரிய வீடும் கட்டுவோம். அந்த வீட்டில் பணமும், காசும் வைத்துக் கொண்டு தேவையான பொருள்களை வாங்கி வசதியாக வாழ்வோம். அப்பொழுது பிராமணபோசனம் பிராமணர்களெல்லாம் தாங்களாகவே வந்து பெண் கொடுப்பதாகச் சொல்வார்கள். அந்தப் பெண்களில் அழகான ஒருத்தியைக் கன்னிகாதானமாகப் பெற்று அவளோடு மன்மதனும் ரதியும் போல் அன்பாக இருந்து இன்பம் காண்போம். ஒரு நல்ல பிள்ளையைப் பெற்று அதற்குச் சோமசன்மா என்று பெயர் வைப்போம். இப்படி நாம் இன்பமாக வாழும் நாளில் மேயப் போன பசுக்கள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வரும், பெற்ற பிள்ளையைக் கீழே வைத்து விட்டு மாடு கட்டப் போவாள் மனைவி. தாய்போனவுடன் பிள்ளை அழும். நாம் ஓடிப்பேர்ய்ப் பிள்ளையை ஏன் அழவைத்து விட்டு வந்து விட்டாய் என்று கோபித்துக் கொண்டு அவள் முதுகில் இப்படி அடிப்போம் என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த தடியை எடுத்து எதிரிலிருந்த பொரிமாக் குடத்தில் அடித்தான். அது மண் குடமாயிருந்த படியால் நொறுங்கி மாவெல்லாம் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.

பொரிமக் குடத்தோடு எல்லாம் போய் விட்டதே என்று வருந்திக் கண்ணிர் வடித்து வயிற்றில் அடித்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல் தரையில் புரண்டான் அந்த இளைஞன்.

ஆகையால் எதையும் காரியத்தில் பார்க்கும் முன்னே கற்பனையை வளர்க்கக் கூடாது.