பதிற்றுப்பத்து/எட்டாம்பத்து

விக்கிமூலம் இலிருந்து

பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை

பாடியவர்: அரிசில்கிழார்

பாட்டு - 71[தொகு]

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக(டு) உதிர்த்த மென்செந் நெல்லின்
5  அம்பண அளவை உறைகுவித் தாங்குக்
கடுந்தே(று) உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளம்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊர்எரி கவர உருத்(து)எழுந்(து) உரைஇப்
10 போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆர்எயல் தோட்டி வெளவினை ஏறொடு
கன்(று)உடை ஆயம் தாணஇப் புகல்சிறந்து
15 புலவுவில் இளையர் அங்கை விடுப்ப
மத்துக்கயி(று) ஆடா வைகல்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழ் ஆகா வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
20 அரும்சமத்(து) அருநிலை தாங்கிய புகர்நுதல்
பெரும்களிற்(று) யானையொ(டு) அரும்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்(கு)எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
25 உரவரும் மடவரும் அறிவுதெரிந்(து) எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே. (71)


பெயர்: குறுந்தாள் ஞாயில்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 72[தொகு]

இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறி(து)உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்திணை முதல்வர்க்(கு) ஓம்பினர் உறைந்து
5  மன்பதை காப்ப அறிவுவலி உறுத்து
நன்(று)அறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்
பண்புநன்(கு) அறியார் மடம்பெரு மையின்
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்(து) ஈண்டி
10 உரவுத்திரை கடுகிய உருத்(து)எழு வெள்ளம்
வரையா மாதிரத்(து) இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்(து)
அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
15 மடங்கல் தீயிஅ அனையை
சினம்கெழு குருசில்நின் உடற்றிசி னோர்க்கே. (72)


பெயர்: உருத்(து)எழு வெள்ளம்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 73[தொகு]

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தே
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
5  செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
10 கழைவிரிந்(து) எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!நின்
வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அள(வு)இறந் தனஎனப் பல்நாள்
யான்சென்(று) உரைப்பவும் தேறார் பிறரும்
15 சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்(கு)உரைப் பேன்என வருந்துவல் யானே. (73)


பெயர்: நிறந்திகழ் பாசிழை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 74[தொகு]

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
5  கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிர(று)உடைப் பைம்பொறிக்
கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பின்
10 புள்ளி இரலைத் தோல்ஊன் உதிர்த்துத்
தீதுகளைந்(து) எஞ்சிய திகழ்விடு பாண்டில்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃ(கு)உடை இரும்பின் உள்அமைத்து வல்லோன்
சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
15 விசும்(பு)ஆடு மரபின் பருந்(து)ஊ(று) அளப்ப
நலம்பெறு திருமணி கூட்டு நல்தோள்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் கருவில்
எண்இயல் முற்றி ஈர்அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
20 காவற்(கு) அமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வன் பெற்றனை இவணர்க்(கு)
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்
முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை
25 வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம்உடை யோர்க்கென
வேறுபடு நனம்தலைப் பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே. (74)


பெயர்: நலம்பெறு திருமணி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 75[தொகு]

இரும்புலி கொன்று பெரும்களி(று) அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை பல்வேல்
பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
5  நின்வழிப் படாஅர் ஆயின் நெல்மிக்(கு)
அறைஉறு கரும்பின் தீம்சேற்(று) யாணர்
வருநர் வரையா வளம்வீங்(கு) இருக்கை
வன்புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்இகல் படுத்துக்
10 கள்உடை நியமத்(து) ஒள்விலை கொடுக்கும்
வெள்வர(கு) உழுத கொள்உடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நா(டு)உடன் ஆடல் யாவண(து) அவர்க்கே. (75)


பெயர்: தீம்சேற்று யாணர்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 76[தொகு]

களி(று)உடைப் பெரும்சமம் ததைய எஃ(கு)உயர்த்(து)
ஒளிறுவாள் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப்(பு) அடைய அரும்துறை போகிப்
பெரும்கடல் நீந்திய மரம்வலி உறுக்கும்
5  பண்ணிய விலைஞர் போலப் புண்ஒரீஇப்
பெரும்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்(கு)
ஈதல் தண்டா மாசித(று) இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
10 கருவி வானம் தண்தளி சொரிந்தெனப்
பல்விதை உழவின் சில்ஏ ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்(கு)உடைத் தெரியல்
கழு(வு)உறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
15 அகன்கண் வைப்பின் நாடுகிழ வோயே. (76)


பெயர்: மாசித(று) இருக்கை
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 77[தொகு]

எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
எனறனிர் ஆயின் ஆறுசெல் வம்பலீர்
மன்பதை பெயர அரசுகளத்(து) ஒழியக்
கொன்றுதோள் ஓச்சிய வென்(று)ஆடு துணங்கை
5  மீபிணத்(து) உருண்ட தேயா ஆழியின்
பண்அமை தேரும் மாவும் மாக்களும்
எண்ணற்(கு) அருமையின் எண்ணின்றோ இலனே
கந்துகோள் ஈயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தின் நிலத்துநிழல் சாடிச்
10 சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவின்பல்
யானை காண்பல்அவன் தானை யானே. (77)


பெயர்: வென்(று)ஆடு துணங்கை
துறை: உழிஞை அரவம்
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 78[தொகு]

வலம்படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ்வெள் அருவி உவ்வரை அதுவே
சில்வளை விறலி செல்குவை ஆயின்
வள்இதழ்த் தாமரை நெய்தலொ(டு) அரிந்து
5  மெல்இயல் மகளிர் ஒய்குவனர் இயலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப்
பல்பயம் நிலைஇய கட(று)உடை வைப்பின்
வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறி
10 பேஎ மன்ற பிறழநோக் கியவர்
ஓ(டு)உறு கடுமுரண் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தம்நாட்(டு)
யாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே. (78)


பெயர்: பிறழநோக்கியவர்
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 79[தொகு]

உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே இரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின்வயின் பிரிந்த நல்இசை கனவினும்
5  பிறர்நசை அறியா வயங்குசெந் நாவின்
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய அளப்(ப)அருங் குரையை அதனால்
நின்னொடு வாரார் தம்நிலத்(து) ஒழிந்து
10 கொல்களிற்(று) யானை எருத்தம் புல்லென
வில்குலை அறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்(து)அவர்
அர(சு)உவா அழைப்பக் கோ(டு)அறுத்(து) இயற்றிய
அணங்(கு)உடை மரபின் கட்டில்மேல் இருந்து
15 தும்பை சான்ற மெய்தயங்(கு) உயக்கத்து
நிறம்படு குருதி புறம்படின் அல்லது
மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்
கேடில ஆக பெரும்நின் புகழே. (79)


பெயர்: நிறம்படு குருதி
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 80[தொகு]

வான்மருப்பின் களிற்றுயானை
மாமலையில் கணண்கொண்(டு)அவர்
எடுத்(து)எறிந்த விறல்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
5  சாந்துபுலர்ந்த வியல்மார்பிற்
தொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்உடை எறுழ்த்தோள் புடையல்அம் கழல்கால்
பிறக்(கு)அடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவல் தெவ்வர் எதிர்நின்(று) உரைஇ
10 இடுக திறையே புர(வு)எதிர்ந் தோற்(கு)என
அம்(பு)உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகல் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
15 புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே. (80)


பெயர்: புண்உடை எறுழ்த்தோள்
துறை: வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பதிகம்[தொகு]

பொய்இல் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவிஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிக மானோ(டு)
5  இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று
முரசும் குடையும் கலனும்கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்(பு)அறுத்துத்
தகடூர் எறிந்து நொச்சிதந்(து) எய்திய
10 அருந்திறல் ஒள்இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறுஇல் வாய்மொழி அரிசில்கிழார்
பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: குறுந்தண்ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ் பாசிழை,
நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை, வென்றாடு துணங்கை,
பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி, புண்ணுடை யெறுழ்த்தோள். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள
எல்லாம் கொண்மின் என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் கொடுப்ப
அவர் யான் இரப்ப இதனை ஆள்க என்று அமைச்சுப் பூண்டார்.